யானைகள் ரயில் தண்டவாளைங்களை கடக்க முயலும் போது ரயிலில் அடிப்பட்டு உயிரிழப்பதை தவிர்க்க ரயில்வேத்துறை புதிய திட்டத்தை மேற்கொண்டுள்ளது.
வனப்பகுதியில் அமைந்துள்ள ரயில் தடங்களில் யானைகள் ரயிலில் அடிப்பது உயிரிழப்பது சமீபகாலமாக அதிகரித்து வருகிறது. இதனால் யானைகளை பாதுகாக்க அரசு தீவிர முயற்சியை மேற்கொண்டு வருகிறது.
இந்நிலையில் நேற்று தமிழகம் வந்த மத்திய ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் யானைகள் உயிரிழப்பதை தவிர்க்க யானை வழிதடங்களில் குகை அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும், இதற்காக விரைவில் வனத்துறையுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளவிருப்பதாகவும் தெரிவித்திருந்தார்.
இதையடுத்து யானைகள் வழிதடங்களுக்கான முதற்கட்ட ஆய்வை தெற்கு ரயில்வே தொடங்கியது. அதன்அடிப்படையில் கோவை – பாலக்காடு உள்ளிட்ட இரண்டு வழித்தடங்கள் அதிக விபத்து நடக்கும் பகுதிகளாக அடையாளம் காணப்பட்டுள்ளன என தெற்கு ரயில்வே பொது மேலாளர் மல்யா தெரிவித்துள்ளார்.
மேலும், இந்த இரண்டு வழித்தடங்களிலும் உள்ள ரயில் பாதையை உயர்த்தி, யானைகள் கடக்க ஏதுவாக குகை போன்ற அமைப்பை வடிவமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும், ஒலி எழுப்பும் விளக்குகள், பிரத்யேக நடைபாதை, சென்சார் வசதிகளையும் செயல்படுத்தி யானைகள் உயிரிழப்பை தவிர்க்க மெகா திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளதாகவும், இதர இடங்களையும் அடையாளம் கண்டு விரைவில் பணிகள் தொடங்கப்படும் என தெரிவித்தார்.
அசாம் உள்ளிட்ட இதர மாநிலங்களிலும் யானைகள் கடக்கும் வழித்தடங்களை கண்டறியும் பணிகளில் இந்திய ரயில்வே ஈடுபட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.








