இந்து சமய அறநிலையத்துறை சார்பில், புதிதாக கல்லூரிகள் தொடங்கக் கூடாது என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
தமிழ்நாடு சட்டமன்றத்தில், இந்து சமய அறநிலையத் துறை மானியக் கோரிக்கையின் போது, 1,500 கோடி ரூபாய் மதிப்பில் பல திட்டங்கள் அறிவிக்கப்பட்டன. அதில், மாநிலம் முழுவதும் பத்து கோயில்களின் நிதியில் 150 கோடி ரூபாய் செலவில் கல்லூரிகள் துவங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இதையடுத்து மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில் சார்பில் சென்னை கொளத்தூரிலும், திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் கோவில் சார்பில் பரமத்தி வேலூரிலும், பழனி தண்டாயுதபாணி கோவில் சார்பில் தொப்பம்பட்டியிலும், திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் சார்பில் விளாத்திகுளத்திலும் என, நான்கு இடங்களில் கல்லூரிகள் துவங்க அனுமதி அளித்து தமிழக உயர்கல்வித்துறை செயலாளர் அக்டோபர் 6ஆம் தேதி அரசாணை பிறப்பித்தார்.
இதற்கு தடை விதிக்கக் கோரியும், அதை ரத்து செய்து, கோவில் சொத்துக்களை உரிய நடைமுறைகளை பின் பற்றாமல் பயன்படுத்த தடை விதிக்கக் கோரியும் சென்னையைச் சேர்ந்த டி ஆர் ரமேஷ் என்பவர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு, தலைமை நீதிபதி சஞ்சீப் பானர்ஜி, ஆதிகேசவலு அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.
20 ஆயிரத்திற்கும் மேலான கோயில்களில் அறங்காவலர்கள் நியமிக்கப்படவில்லை என்பதை சுட்டிக்காட்டிய மனுதாரர், கொளத்தூரில் கபாலீஸ்வரர் கோயிலுக்கு சொந்தமாக சொத்து எதுவும் இல்லை என்றும், முதலமைச்சர் தொகுதி என்பதால், அவசரமாக அறநிலையத்துறை சார்பில் கல்லூரி துவங்கப் படுவதாகவும் குறிப்பிட்டிருந்தார்.
இவ்வழக்கை விசாரித்த நீதிபதிகள், அறங்காவலர் இன்றி, நீதிமன்ற அனுமதியில்லாமல், இந்து சமய அறநிலையத்துறை சார்பில், புதிதாக கல்லூரிகள் தொடங்க நடவடிக்கை எடுக்கக்கூடாது எனவும், ஏற்கனவே உள்ள 4 கல்லூரிகளில், ஒரு மாத காலத்துக்குள், இந்து மத வகுப்புகளை நடத்தாவிட்டால், கல்லூரிகளை தொடர்ந்து நடத்த முடியாது எனவும் உத்தரவிட்டனர்.
இதையடுத்து, 3 வாரங்களில் பதில் மனு தாக்கல் செய்ய தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிட்டு, விசாரணையை 5 வாரங்களுக்கு ஒத்திவைத்தனர்.








