நெல்லை குவாரி விபத்து- 2 பேர் உயிருடன் மீட்பு

நெல்லை அருகே கல்குவாரி விபத்தில் சிக்கிய இரண்டு பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர். மற்றவர்களை மீட்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. நெல்லை மாவட்டம் முன்னீர்பள்ளம் அருகே அடைமதிப்பான் குளம் கிராமத்தில் வெங்கடேஸ்வரா என்ற பெயரில்…

நெல்லை அருகே கல்குவாரி விபத்தில் சிக்கிய இரண்டு பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர். மற்றவர்களை மீட்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

நெல்லை மாவட்டம் முன்னீர்பள்ளம் அருகே அடைமதிப்பான் குளம் கிராமத்தில் வெங்கடேஸ்வரா என்ற பெயரில் கல்குவாரி இயங்கி வருகிறது. இங்கு வழக்கம்போல் நேற்றிரவு கல்களை ஏற்றும் பணிகள் நடைபெற்று வந்தது.

இந்நிலையில் இரவு சுமார் 12 மணி அளவில் திடீரென மிகப்பெரிய பாறை உருண்டு பள்ளத்துக்குள் கல் அள்ளும் பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தவர்கள் மீது விழுந்ததுள்ளது. இதில் 2 லாரிகள், 3 கிட்டாச்சி உள்ளே மாட்டிக் கொண்டன. லாரி டிரைவர்கள் செல்வகுமார், ராஜேந்திரன், கிட்டாச்சி ஆபரேட்டர்கள் செல்வம், முருகன், விஜய் பாறைக்குள் சிக்கி உயிருக்கு போராடி வந்தனர்.

இதுகுறித்த தகவல் அறிந்து நாங்குநேரி பாளையங்கோட்டை, நாங்குநேரி ஆகிய பகுதிகளில் இருந்து மீட்பு பணிக்காக தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சரவணனும் நேரில் சென்று மீட்பு பணிகளை பார்வையிட்டார். ஆனால் இரவு நேரம் என்பதாலும், மழை பெய்து வருவதாலும், 300 அடி பள்ளம் என்பதனாலும் மீட்பு பணி செய்வதில் சிரமம் ஏற்பட்டது.

இருப்பினும் காலை வரை இடைவிடாது மீட்பு பணியில் அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், ராமேஸ்வரம் ஐஎன்எஸ் பருந்து கடற்படை தளத்தில் இருந்து லெப்டினன்ட் கமாண்டர் சஞ்சய் தலைமையிலான 4 பேர் கொண்ட மீட்புக்குழுவினர் ஹெலிகாப்டர் மூலம் மீட்புப்பணியில் ஈடுபட்டனர. ஆனால் 300 அடி பள்ளம் என்பதால் ஹெலிகாப்டர் மூலம் மீட்க முடியாமல் அவர்கள் திரும்பிச் சென்றனர்.

தொடர்ந்து தீயணைப்பு படையினர், போலீசார் மீட்பு பணியில் ஈடுபட்டு முருகன் மற்றும் விஜய் ஆகியோரை உயிருடன் மீட்கப்பட்டனர். மற்றவர்களை மீட்கும் பணி துரிதமாக நடந்து வருகிறது. சம்பவ இடத்தில் மாவட்ட ஆட்சியர் விஷ்ணு, நெல்லை சரக டிஐஜி பரவேஷ்குமார், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சரவணன் ஆகியோர் மீட்பு பணிகளை விரைவு படுத்தி வருகின்றனர்.

மேலும், குவாரியில் சிக்கியவர்களை மீட்க தேசிய பேரிடர் மீட்பு படையினர் அரக்கோணத்தில் இருந்து நெல்லை வருகின்றனர்.

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.