உலகப் புகழ்பெற்ற கூவாகம் கூத்தாண்டவர் சித்திரை திருவிழா திருத்தேரோட்டத்தில் பல்லாயிரக்கணக்கான திருநங்கைகள் மற்றும் பொதுமக்களும்
கலந்து கொண்டு திருத்தேரை வடம் பிடித்து இழுத்து சென்றனர்.
இந்துக்களின் புராணநூல்களில் ஒன்றான மகாபாரதத்தை நினைவு கூறும் வகையில் அமையப்பெற்றுள்ள கூத்தாண்டவர் கோவில் சித்திரைத் திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்று வருகிறது. கடந்த 18ஆம் தேதி சாகை வார்த்தல் நிகழ்ச்சியுடன் தொடங்கி 18 நாட்களாக நடைபெறும் இந்த விழாவில் முக்கிய நிகழ்வான திருநங்கைகள் தாலி கட்டும் நிகழ்ச்சி நேற்று கோவிலில் நடைபெற்றது.
இதில் தமிழகத்தில் இருந்து மட்டுமல்லாமல் இந்தியாவிலிருந்து பல்வேறு மாநிலங்களை சேர்ந்த திருநங்கைகளும் வெளிநாட்டில் இருந்து வந்த பல்லாயிரக்கணக்கான திருநங்கைகள் அரவாணை கணவனாக பாவித்து மணப்பெண் கோலத்தில் வந்து பூசாரி கையால் தாலி கட்டிக் கொண்டு அரவணை கணவனாக ஏற்றுக் கொண்டனர். அதன் பின் இரவு முழுவதும் கும்மியடித்து ஆடி பாடி மகிழ்ந்தனர். விழாவின் இறுதி நிகழ்ச்சியான திருத் தேரோட்டம் காலை 8 மணிக்கு அரவான் சிரசு கோவிலை சுற்றி வந்த பின்பு திருத்தேரில் பொருத்தப்பட்டவுடன் தொடங்கியது.
இதில் சுற்று வட்டார கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள் மற்றும் ஆயிரக்கணக்கான திருநங்கைகள் திருத்தேரை வடம் பிடித்து இழுத்தனர். இதனைத் தொடர்ந்து திருத்தேர் செல்லும் போது அதற்கு முன்பாக குவியல் குவியிலாக கற்பூரம் கொளுத்தி தேங்காய் உடைத்து கும்மி அடித்த பின்பு பந்தலடிக்குச் சென்று திருநங்கைகள் அரவானுக்கு கட்டப்பட்ட தாலியை அறுத்து, வளையல்கள் உடைத்து தலையில் சூடியிருந்த பூவை அறுத்து தங்கள் நெற்றியில் உள்ள குங்குமத்தை அழித்து தாலியை துறந்தனர்.
அப்பொழுது ஒப்பாரி வைத்து அழுத பின்பு அங்குள்ள கிணறுகளில் குளித்துவிட்டு பின்பு வெள்ளை புடவை அணிந்து விதவை கோலம் பூண்டனர். நாளை மறுநாள் தர்மம் பட்டாபிஷேகத்துடன் இந்த திருவிழா நிறைவு பெறுகிறது.
—————–ரெ.வீரம்மாதேவி







