நீட் விவகாரம் : மாணவர்களின் குரல் நாடு முழுவதும் உரக்க ஒலிக்கும் – மல்லிகார்ஜுன கார்கே…!

நீட் தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரத்தில் மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே வலியுறுத்தியுள்ளார்.

அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,

“90 வினாத்தாள்கள் கசிவுகள் நிகழ்ந்துள்ளன. லட்சக்கணக்கான மாணவர்களின் எதிர்காலம் சீரழிந்துள்ளது. நீட் (NEET) தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரத்தால் 20 மாணவர்கள் தங்கள் உயிரை மாய்த்துக்கொண்டுள்ளனர். பல குடும்பங்கள் நிலைகுலைந்து போயுள்ளன.

ஆனால், மோடி அரசின் கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தனது பதவியை விடாமல் ஒட்டிக்கொண்டிருக்கிறார். அதுமட்டுமின்றி, மாணவர்களின் குரலை (‘Chhatron Ki Goonj’) ‘பயங்கரவாதிகள்’ என்று முத்திரை குத்திப் பேசி வருகிறார்.

விவசாயிகளை இழிவுபடுத்தும் வகையில், நாடாளுமன்றத்திலேயே பிரதமர் மோடி அவர்களை ‘ஆர்ப்பாட்டங்களில் வாழ்வோர்’ (andolan-jeevi) என்றும் ‘ஒட்டுண்ணிகள்’ என்றும் வர்ணித்ததை நாடு இன்னும் மறக்கவில்லை. இந்த அரசை யார் கேள்வி கேட்டாலும், அவர்கள் ‘தேச விரோதிகள்’ என்று முத்திரை குத்தப்படுகிறார்கள்.

ChhatronKiGoonj (மாணவர்களின் குரல்) நாடு முழுவதும் உரக்க ஒலிக்கும். மோடி அரசின் அமைச்சர் பிரதான் பதவி விலகியே தீர வேண்டும்” என்று கூறப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.