நீட் தேர்விலிருந்து முழுமையாக விலக்கு பெற வேண்டுமென ஏ.கே.ராஜன் குழுவுக்கு மார்க்சிஸ்ட் வலியுறுத்தியுள்ளது.
நீட் தேர்வால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை ஆராய ஓய்வுபெற்ற நீதியரசர் ஏ.கே.ராஜன் தலைமையில் குழு அமைத்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டிருந்தது. இந்த குழு ஒரு மாத காலத்திற்குள் அறிக்கை தாக்கல் செய்யவுள்ளது. இந்நிலையில் நீட் தேர்வால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து பொதுமக்கள் தங்கள் கருத்துகளை ஜூன் 23ஆம் தேதிக்குள் தெரிவிக்கலாம் என ஏ.கே.ராஜன் குழு அறிவித்தது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இதனையடுத்து, பல்வேறு தரப்பினரும் நீட் தொடர்பான தங்களது கருத்துக்களை எடுத்துவைத்தனர். இந்த நிலையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், ஏ.கே.ராஜன் குழுவுக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில், தமிழ்நாட்டில் நடைமுறையில் உள்ள இளநிலை மற்றும் முதுநிலை அளவிலான மருத்துவக் கல்வி என்பது தற்போது கொண்டு வரப்பட்டுள்ள இந்த நீட் தேர்வினால் முழுமையாக பாதிக்கப்படுகிறது, தமிழ்நாட்டில் வலுவாக உள்ள பொது சுகாதார முறையையும் கூட பாதிக்கிறது என்று குறிப்பிட்டுள்ளார்.
இன்றைய நிலையில் மருத்துவக் கல்வியையும் மக்களுக்கான மருத்துவ சேவையையும் தனித்துப் பிரித்துப் பார்க்க முடியாது என்ற நிலையில் அனைவருக்குமான சுகாதாரம் பெரிதும் பாதிக்கப்படும் நிலையையும் நீட் தேர்வு முறை உருவாக்குகிறது எனவும் குற்றம்சாட்டியுள்ளார்.
திறமையான, தகுதி வாய்ந்த, மாணவர்களுக்கும், சமூகத்தில் மிகவும் பின் தங்கியுள்ள பகுதிகளிலிருந்து வரும் மாணவர்களுக்கும் மருத்துவ படிப்புகளை எட்டாத ஒன்றாக மாற்றிவிடும் நிலைமையையும் உருவாக்குகிறது என்றதோடு, வசதி படைத்தவர்களுக்கும், பயிற்சி மையங்களில் ஏராளமாக செலவு செய்து படிப்பவர்களுக்கு மட்டுமே இனி மருத்துவ படிப்பு என்பதையும் கூட நீட் தேர்வு முறை உருவாக்குகிறது. ஆகவே நீட் நுழைவுத் தேர்விலிருந்து தமிழ்நாட்டிற்கு முற்றாக விலக்கு பெறும் வகையில் சாத்தியமான அனைத்து முயற்சிகளையும் தங்கள் தலைமையிலான குழு முன்னெடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.