அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு இரண்டாம் தவணையாக 2000 ரூபாய் மற்றும் 14 வகையான மளிகைப் பொருட்களை வரும் 25ஆம் தேதிக்குள் விநியோகம் செய்து முடிக்க வேண்டும் என தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.
கொரோனா பொது முடக்கத்தால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதை கருத்தில்கொண்டு குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.4000 கொரோனா நிவாரணத் தொகை மற்றும் 14 வகையான மளிகைப் பொருட்கள் அடங்கிய தொகுப்புகள் வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். இதில் முதல் தவணையாக கடந்த மே மாதம் ரூ.2000 வழங்கப்பட்டது.

இரண்டாவது தவணையாக 2000 ரூபாயுடன் 14 வகையான மளிகைப் பொருட்கள் வழங்கும் திட்டத்தை கடந்த 3ம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இந்த நிலையில் வரும் 25ம் தேதிக்குள் இரண்டாம் தவணையாக ரூ.2000 மற்றும் 14 வகையான மளிகைப் பொருட்களை விநியோகம் செய்து முடிக்க வேண்டும் என உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறைக்கு தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.







