கிராமப்புற மாணவர்களுக்கு கடுமையான ஒன்றாக நீட் தேர்வு மாறியுள்ளது – அமைச்சர் ரகுபதி

நீட் தேர்வு கிராமப்புற ஏழை, எளிய மாணவர்களுக்கு கடுமையான ஒன்றாக மாறியிருப்பதாக சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி தெரிவித்துள்ளார். சிந்தாதிரிப்பேட்டையில் உள்ள ஆதிபுரீஸ்வரர் மற்றும் ஆதிகேசவ பெருமாள் திருக்கோயில் கோயிலில், 77-வது சுதந்திர தின விழா…

நீட் தேர்வு கிராமப்புற ஏழை, எளிய மாணவர்களுக்கு கடுமையான ஒன்றாக மாறியிருப்பதாக சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி தெரிவித்துள்ளார்.

சிந்தாதிரிப்பேட்டையில் உள்ள ஆதிபுரீஸ்வரர் மற்றும் ஆதிகேசவ பெருமாள் திருக்கோயில் கோயிலில், 77-வது சுதந்திர தின விழா சிறப்பு வழிபாடு மற்றும் பொது விருந்து நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தார். பின்னர் விழாவினை தொடங்கி வைத்து பொது மக்களுடன் அமர்ந்து உணவருந்தினார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்த பிறகு சமபந்தி விருந்தில் பங்கேற்றனர்.

பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அமைச்சர் ரகுபதி, நீட் தேர்வு என்பது கிராமப்புற ஏழை, எளிய மாணவர்கள் கடுமையான ஒன்றாக மாறியிருக்கிறது. லட்சக்கணக்கான ரூபாய் செலவழித்து படிப்பவர்கள் மட்டும்தான் நீட் மதிப்பெண் பெற முடிகிறது. அரசு பள்ளியில் படித்தவர்கள் மருத்துவக் கல்லூரியில் இடம்பெற்று இருக்கிறார்கள் என்று ஆளுநர் சொல்கிறார்.

அதற்கு காரணம் அரசு கொண்டுவந்த 7.5 சதவிகித இட ஒதுக்கீடு தான். ஆனால் நீட் தேர்வு இல்லையெனில் 10-15 சதவீதம் அளவிற்கு அரசு பள்ளி மாணவர்கள் மருத்துவ கல்வியில் இடம்பெறுவதற்கான வாய்ப்பு உண்டு. இந்த கூடுதல் வாய்ப்பு ஏழை எளிய மாணவர்களுக்கு மறுக்கப்படக்கூடாது என்பதற்காகத்தான் நீட் தேர்வு வேண்டாம் என கூறி வருகிறோம் என்று தெரிவித்தார்.

  • பி.ஜேம்ஸ் லிசா
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.