சக்கரன்கோவில் அருகே நீட் தேர்வு தோல்வி பயத்தில் மாணவி உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் தொடர்பாக காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் அருகே குலசேகரமங்கலம் கிராமத்தைச்
சேர்ந்தவர்கள் அமல்ராஜ் – வெண்ணியார் தம்பதி. இவர்களுக்கு ராஜலட்சுமி (21) என்ற மகளும், உதய ஜோதி (19) என்ற மகனும் உள்ளனர். இவர்கள் விவசாய குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். இதில், இராஜலட்சுமி கடந்த இரண்டு ஆண்டுகளாக நீட் தேர்வு எழுதி தோல்வி அடைந்ததாகக் கூறப்படுகிறது. இந்த ஆண்டு திருநெல்வேலியில் உள்ள தனியார் நீட் தேர்வு பயிற்சி மையத்தில் சேர்ந்து படித்து மூன்றாவது முறையாக நீட் தேர்வு எழுதியுள்ளார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு நீட் தேர்வு முடிவுகள் 7ஆம்தேதி வெளியிடப்படும் என அறிவிப்பு வெளியாகியது. இந்த நிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு ஆன்சர் கீ வெளியிடப்பட்டதாகக் கூறப்படுகிறது. அதிலிருந்து ராஜலட்சுமி சோகமாக காட்சி அளித்துள்ளார். இந்த நிலையில் தனது தாய் தந்தை இருவரும் வேலைக்குச் சென்ற பின்பு தனது தாய், தந்தையின் கனவை நிறைவேற்ற முடியாத காரணத்தினால் தாயின் சேலையில் தூக்குபோட்டு ராஜலட்சுமி உயிரை மாய்த்துக் கொண்டார்.
வேலைக்குச் சென்று திரும்பிய பெற்றோர் ராஜலட்சுமி உயிரிழந்திருப்பதைக் கண்டு கதறி அழுதுள்ளனர். தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்த சேர்ந்தமரம் காவல்துறையினர் மாணவியின் உடலை மீட்டு சங்கரன்கோவில் அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். நீட் தேர்வு
தோல்வி பயத்தில் மாணவி உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் குலசேகரமங்கலம் கிராமத்தை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
இச்சம்பவம் குறித்து சேந்தமரம் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
-ம.பவித்ரா