நீட் தேர்விலிருந்து தமிழ்நாட்டிற்கு விலக்கு பெறுவது தொடர்பாக முதலமைச்சர் தலைமையில் நடைபெற்ற கூட்டத்திலிருந்து பாஜக வெளிநடப்பு செய்துள்ளது.
மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான நீட் நுழைவுத் தேர்விலிருந்து விலக்கு கோரும் மசோதா தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த மசோதா குடியரசுத் தலைவருக்கு அனுப்பாமல் ஆளுநர் நிலுவையில் வைத்திருப்பதை ஆளும் கட்சியும் எதிர்க் கட்சியும் கண்டித்துள்ளன.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இது சம்பந்தமாக தமிழ்நாடு எம்.பிக்கள் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்திக்க முயன்றனர். ஆனால் எம்.பிக்களை சந்திக்க அமித்ஷா மறுத்துள்ளார். இதன் காரணமாக எம்.பிக்கள் அதிருப்தியில் உள்ளனர். இச்சூழலில் அனைத்துக்கட்சிக் கூட்டம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காலை தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் 13 கட்சிகளின் பிரதிநிதிகள் பங்கேற்றனர்.
இதில், நீட் தேர்விலிருந்து தமிழ்நாட்டிற்கு விலக்கு அளிக்கக்கோரி முதலமைச்சர் தலைமையில் குடியரசுத்தலைவரை சந்திப்பது குறித்த வரைவு தீர்மானத்தை அமைச்சர் மா.சுப்பிரமணியன் முன்வைத்தார். இந்த தீர்மானத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜக வெளிநடப்பு செய்துள்ளது.
இதனையடுத்து செய்தியாளர்களை சந்தித்த பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன், “தமிழக அரசின் தீர்மாணத்தில் எங்களுக்கு உடன்பாடில்லை” என்று தெரிவித்துள்ளார். மேலும், “சமூக நீதிக்கு எதிராக நீட் இருப்பதாக தமிழ்நாடு அரசு குற்றம்சாட்டியுள்ளது. ஆனால், சமூக நீதிக்கு நீட் தேர்வால் பாதிப்பு ஏதும் இல்லை”என்று கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர், “மாநில அரசு நிதியிலிருந்து நடத்தப்படும் மருத்துவ கல்லூரிகளில் உரிமைகளை மத்திய அரசு பறித்துவிட்டதாக மாநில அரசு குற்றம்சாட்டுகிறது. உண்மையில், மருத்துவக் கல்லூரிகளுக்கு 40% மாநில அரசும் 60% மத்திய அரசும் நிதி வழங்குகிறது.
2013ம் ஆண்டில் திமுக-காங் ஆட்சியில்தான் நீட் தேர்வுக்கு அடிதளமிடப்பட்டது. இப்படியான நிலையில் தற்போது நாடு முழுவதும் உள்ள மருத்துவ இடங்களில் 12% மருத்துவ இடங்களை தமிழ்நாடு பெற இருக்கிறது. இதில் தற்போதுள்ள இடஒதுக்கட்டின்படி 7.5% அரசு பள்ளி மாணவர்கள் சேர்ந்தால் தமிழ்நாடுதான் அதிகம் பயனடையப்போகிறது.” என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும், “கடந்த 12 வருடங்களாக தமிழக பாடதிட்டம் மாற்றப்படவில்லை. இதனாலேயே நீட் தேர்வில் தமிழ்நாடு பின்னடைந்துள்ளது. ஆனால் தற்போது தேசிய சராசரியை விட அதிகமாக தமிழக மாணவர்கள் தேர்ச்சியடைகிறார்கள். தமிழ்நாட்டு மாணவர்கள் மீது நம்பிக்கை வையுங்கள். அவர்களை குழப்பாதீர்கள்.” என்றும் வலியுறுத்தியுள்ளார்.
அதேநேரம், “தமி்ழ்நாட்டில் எத்தனை அரசியல்வாதிகள் தனியார் மருத்துவக் கல்லூரிகளை நடத்தி வருகின்றனர்? நீட் தேர்வுக்கு முன்னர் அவர்கள் பெற்ற கட்டணம் மற்றும் எத்தனை அரசு பள்ளி மாணவர்கள் அக்கல்லூரியில் சேர்ந்துள்ளனர் என்பது குறித்து வெள்ளை அறிக்கையை முதலமைச்சர் வெளியிட வேண்டும்” என்றும் வலியுறுத்தியுள்ளார்
மேலும், “தனியார் மருத்துவக் கல்லூரிகளின் கட்டணக் கொள்ளையை நீட் தேர்வு தடுத்து நிறுத்தியிருக்கிறது. பழங்குடியின மாணவி எவ்வித பயிற்சியும் இல்லாம் நீட் தேர்வில் தேர்ச்சியடைந்துள்ளார்.” என்றும் கூறியுள்ளார்.