நடிகை நயன்தாரா மற்றும் இயக்குநர் விக்னேஷ் சிவன் தமிழக முதல்வர் ஸ்டாலினை நேரில் சந்தித்து தங்களது திருமண அழைப்பிதழை வழங்கினர்.
முன்னணி நடிகையான நயன்தாராவும், பிரபல இயக்குநருமான விக்னேஷ் சிவனும் நானும் ரவுடிதான் படத்தில் இணைந்து பணியாற்றினர். கடந்த 6 ஆண்டுகளாக இருவரும் காதலித்து வந்தனர். இவர்களது திருமணம் குறித்து ரசிகர்கள் தொடர்ந்து கேள்வி கேட்டு வந்த நிலையில், தனக்கும், விக்னேஷ் சிவனுக்கும் குடும்பத்தார் முன்னிலையில் எளிமையாக நிச்சயதார்த்தம் நடந்ததாக தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டி ஒன்றில் நயன்தாரா தெரிவித்திருந்தார்.
அதைத்தொடர்ந்து, ‘காத்து வாக்குல ரெண்டு காதல்’ திரைப்பட வெளியீட்டின்போது விக்னேஷ் சிவன் அளித்த பேட்டியில், தங்களது திருமணம் விரைவில் நடக்கப்போவதாக உறுதிப்படுத்தியிருந்தார். ஜூன் 9ஆம் தேதி திருமணம் செய்துகொள்ளவுள்ளதாக தகவல்கள் வெளியாகி வந்தன.
திருப்பதியில் திருமணம் நடத்த இருவரும் திட்டமிட்டிருந்த நிலையில், அங்கு 150 விருந்தினர்கள் வரை திருமணத்தில் கலந்துகொள்ள கோயில் நிர்வாகம் அனுமதிக்கவில்லை. இதனால், தற்போது சென்னை மகாபலிபுரத்தில் ஜூன் 9ஆம் தேதி திருமணம் நடக்கவுள்ளதாக தனியார் ஊடகம் ஒன்றுக்கு இருவரும் தெரிவித்துள்ளனர்.
இதைத்தொடர்ந்து, நயன்தாராவும், விக்னேஷ் சிவனும் முதல்வர் ஸ்டாலினை அவரது இல்லத்தில் நேரில் சந்தித்து தங்களது திருமண அழைப்பிதழை வழங்கியுள்ளனர். அப்போது, சேப்பாக்கம் திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலினும் உடனிருந்தார்.
-ம.பவித்ரா








