உக்ரைனுக்கு ரசாயன மற்றும் அணு ஆயுத தடுப்பு ஆயுதங்களை வழங்க நேட்டோ அமைப்பு முடிவு செய்துள்ளது.
உக்ரைன் – ரஷ்யா இடையிலான போர் ஒருமாத காலமாக நீடித்து வரும் நிலையில், உக்ரைனில் இருந்து 35 லட்சத்துக்கும் மேற்பட்டோர் வெளியேறி அண்டை நாடுகளில் தஞ்சம் அடைந்துள்ளனர். மேலும், போர் காரணமாக ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்திருப்பதை அடுத்து, போர் சூழல் குறித்து விவாதிக்க நேட்டோ அமைப்பு நாடுகளின் கூட்டம் பெல்ஜியம் தலைநகர் பிரஸ்ஸல்ஸில் நடைபெற்றது. இதில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன், இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் உக்ரைனுக்கு ரசாயன மற்றும் அணு ஆயுத தடுப்பு ஆயுதங்களை வழங்க முடிவு செய்யப்பட்டது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
உக்ரைனில் ரஷ்ய போரால் பாதிக்கப்பட்டு உள்ள மக்களுக்கு மனிதநேய அடிப்படையில், புதிய நிதி ஒதுக்கீடு முறையில் 7 ஆயிரம் கோடி ரூபாய் வழங்குவதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அறிவித்துள்ளார். கூடுதலான தொகையை வருகிற மாதங்களில் வழங்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள தயாராகி வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
ரஷ்யாவுக்கு எதிராக ஐ.நா பொதுசபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் மீது வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இந்த தீர்மானத்துக்கு ஆதரவாக 140 நாடுகள் வாக்களித்தன. தீர்மானத்துக்கு எதிராக ரஷ்யா, பெலாரஸ், சிரியா, வட கொரியா, எரித்ரியா ஆகிய 5 நாடுகள் வாக்களித்தன. சீனா உள்ளிட்ட 38 நாடுகள் வாக்கெடுப்பில் பங்கேற்கவில்லை. எதிர்பார்த்த அம்சங்கள் இல்லை எனக்கூறி இந்த வாக்கெடுப்பை இந்தியா புறக்கணித்தது.
ரஷ்யா உடனான போரில் உக்ரைனுக்கு உதவியாக 6 ஆயிரம் ஏவுகணைகளை அனுப்பியுள்ளதாக இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் கூறியுள்ளார். மேலும், போரால் ஏற்படும் பொருளாதார நெருக்கடியைச் சமாளிக்க 25 மில்லியன் யூரோ வழங்கியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.