மாநகராட்சி ஆணையர் கார்த்திகேயன் மீது, தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தில் தேசிய தூய்மை பணியாளர் ஆணைய தலைவர் வெங்கடேசன் நேரில் புகார் அளித்துள்ளார்.
மதுரை மாநகராட்சியில் போராட்டம் நடத்தி வந்த தூய்மை பணியாளர்களை நேரில் சந்தித்து குறைகளை கேட்பதற்காக கடந்த ஜூலை 12ம் தேதி தேசிய தூய்மை பணியாளர் ஆணைய தலைவர் வெங்கடேசன் சென்றுள்ளார். அப்போது, தூய்மை பணியாளர்களின் கோரிக்கைகளை மாநகராட்சி ஆணையர் கார்த்திகேயன் நேரில் கேட்க வேண்டும் என வலியுறுத்தியதாகவும், அதற்கு மறுப்பு தெரிவித்து அவமானப்படுத்தும் வகையில் அவர் புறப்பட்டு சென்றதாகவும் கூறப்படுகிறது.

இதுகுறித்து தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தில், மதுரை மாநகராட்சி ஆணையர் கார்த்திகேயன் தன்னை அவமானப்படுத்தியதாக தேசிய தூய்மை பணியாளர் ஆணைய தலைவர் வெங்கடேசன் நேரில் புகார் அளித்துள்ளார். குடியரசுத் தலைவர், ஆளுநர், முதலமைச்சர், தலைமைச் செயலாளர் உள்பட பலருக்கும் அவர் புகார் கடிதம் அனுப்பி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.







