தவெக பரப்புரைச் செயலாளராக நாஞ்சில் சம்பத் நியமனம்

தவெகவில் இணைந்த நாஞ்சில் சம்பதிற்கு அக்கட்சியின் பரப்புரைச் செயலாளர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.

பேச்சாளர் நாஞ்சில் சம்பத், நேற்று தவெக தலைவர் விஜய் முன்னிலையில் அக்கட்சியில் இணைந்தார். இந்த நிலையில் இன்று அவருக்கு கட்சியின் பரப்புரைச் செயலாளர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக தவெக தலைவர் விஜய் வெளியிட்டுள்ள அறிக்கையில் ,

”தமிழகத்தின் மூத்த அரசியல்வாதிகளுள் ஒருவர், சிறந்த பேச்சாளர், அனைவரிடத்திலும் இனிமையாகப் பழகக் கூடியவர், அண்ணன் திரு. நாஞ்சில் சம்பத் அவர்கள். தம்மைத் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைத்துக்கொண்டுள்ளார். மக்களுக்கான அரசியலில் நம்மோடு பயணிக்க இருக்கும் அவரை வரவேற்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.

அண்ணன் திரு. நாஞ்சில் சம்பத் அவர்கள். கழகத்தின் பரப்புரைச் செயலாளர் (Campaign Secretary) பொறுப்பில் நியமிக்கப்படுகிறார் என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக்கொள்கிறேன். இவர், பொதுச் செயலாளர் திரு. என்.ஆனந்த் அவர்களுடன் இணைந்து தன்னுடையப் பணிகளை மேற்கொள்வார். கழக நிர்வாகிகளும் தோழர்களும் இவருக்கு முழு ஒத்துழைப்பு நல்கி, மக்கள் பணியாற்றிட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்”

என்று தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.