நாங்குநேரி விவகாரம் : “சாதிய விழிப்புணர்வு போரை” தமிழகத்தில் தொடங்க வேண்டும் – இயக்குநர் அமீர்

நாங்குநேரி விவகாரம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாகவும்  “சாதிய விழிப்புணர்வு போரை” தமிழகத்தில் தொடங்க வேண்டும் எனவும் இயக்குநர் அமீர் தெரிவித்துள்ளார். திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரியில் பள்ளி மாணவர் சின்னதுரை மற்றும் அவரது தங்கையை சக…

நாங்குநேரி விவகாரம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாகவும்  “சாதிய விழிப்புணர்வு போரை” தமிழகத்தில் தொடங்க வேண்டும் எனவும் இயக்குநர் அமீர் தெரிவித்துள்ளார்.

திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரியில் பள்ளி மாணவர் சின்னதுரை மற்றும் அவரது தங்கையை சக பள்ளி மாணவர்கள் வீடு புகுந்து வெட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. படுகாயம் அடைந்த இருவரும் நெல்லை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

இந்த தாக்குதல் தொடர்பாக 17 வயதுடைய பிளஸ்-2 மாணவர்கள் 4 பேர் மற்றும் 2 சிறார் உட்பட 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த கொடூர சம்பவங்களை தடுத்து நிறுத்துவதற்கு போதிய ஆலோசனைகளை வழங்கவும், இதேபோன்ற சம்பவங்களை அரசு கையாள்வதற்கும் முன்னாள் நீதியரசர் சந்ரு தலைமையில் ஒருநபர் குழுவை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அமைத்து உத்த்ரவிட்டார்.

பாதிக்கப்பட்ட சிறுவனின் மேற்படிப்பிற்கான செலவை தானே ஏற்பதாக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் காணொளி வாயிலாக அறிவித்தார். இந்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கும் நிலையில் தொடர்பாக திரையுலகைச் சேர்ந்த பிரபலங்கள் பலர் தங்கள் கண்டனத்தைத் தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில் இயக்குநர் அமீர் இது குறித்து வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளதாவது..

“ திருநெல்வேலி மாவட்டத்தின் நாங்குநேரியில் பள்ளி மாணவனையும் அவனுடைய இளம் தமக்கையையும் வெட்டிச் சாய்த்த அரிவாளின் பின்னணியில் சாதியம் இருக்கிறது என்பதும், ஓடிய ரத்தம் தமிழரின் குருதி என்பதும், இப் பாதகச் செயலில் ஈடுபட்டது பள்ளி மாணவர்கள் என்பதும் உண்மையிலேயே என்னை பேரதிர்ச்சி அடையச் செய்திருக்கிறது.

சாதி, மதங்களைக் கடந்து ஒன்றாய்க் கலந்து திரிந்து ஒரு தட்டில் உண்ணும் மாணவச் சமுகத்திலேயே இந்த வன்மம் தலைதூக்கி நிற்பதும், அதன் பின்னணியில் பெற்றோர்களின் வளர்த்தெடுத்தல் அடங்கியிருப்பதும், சாதிய தீயை அணைய விடாமல் சில சுயலாப சாதிய அமைப்புகள் நெய்யை ஊற்றி வளர்த்துக் கொண்டிருக்கின்றன என்பதெல்லாம் அவமானத்திற்குரியதாக அமைந்திருக்கிறது.

*வேங்கை வயலைப் போல் வேடிக்கை பார்க்காமல், இனியும் இதுபோன்று தமிழகத்தில் எங்கும் நடந்திடாமல் காக்கும் பெரும் பொறுப்பு தமிழக அரசின் கைகளில் இருக்கிறது என்று நான் நம்புகிறேன். மேலும், “சாதிய விழிப்புணர்வு போரை” தமிழகத்தில் தொடங்க வேண்டியது தமிழர்களாகிய நமது தலையாய கடமையாகும்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.