நாமக்கல் உதவி ஆய்வாளருக்கு சொந்தமான இடங்களில் நடைபெற்ற சோதனையில் – கணக்கில் வராத பணம், கணிணி, ஆவணங்கள் பறிமுதல்!

நாமக்கல் உதவி ஆய்வாளருக்கு சொந்தமான 4 இடங்களில் நடைபெற்ற லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நிறைவு; கணக்கில் வராத பணம், கணிணி, ஆவணங்கள் போலீசார் பறிமுதல் செய்தனர். நாமக்கல் நகர காவல் நிலையத்தில் உதவி…

நாமக்கல் உதவி ஆய்வாளருக்கு சொந்தமான 4 இடங்களில் நடைபெற்ற லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நிறைவு; கணக்கில் வராத பணம், கணிணி, ஆவணங்கள் போலீசார் பறிமுதல் செய்தனர்.

நாமக்கல் நகர காவல் நிலையத்தில் உதவி காவல் ஆய்வாளராக பணியாற்றி வருபவர் பூபதி. இவர் நாமக்கல் திருநகரில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். பூபதி மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு புகார் சென்ற நிலையில், நேற்று காலை 6 மணியளவில் லஞ்ச ஒழிப்பு துணை காவல் கண்காணிப்பாளர் சுபாஷினி தலைமையிலான போலீசார் திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.

இந்த சோதனையின் போது வீட்டில் உள்ள கணினி மற்றும் ஆவணங்களை சரிபார்க்கும் பணியில் லஞ்ச ஒழிப்பு போலீசார் ஈடுபட்டனர். காலையில் தொடங்கிய இந்த சோதனை மாலை 6 மணி வரை நீடித்தது. சோதனையில் கணக்கில் வராத 1 லட்சத்து 74 ஆயிரம் ரொக்கப் பணம், வங்கி மற்றும் முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டது.

இதேபோல் மல்லசமுத்திரம் கீழ்முகம் கிராமத்தில் உள்ள உள்ள எஸ்.ஐ பூபதியின்
தந்தை தங்கவேலுக்கு சொந்தமான வீட்டிலும், வெண்ணந்தூர் அருகே உள்ள கல்கட்டானூர் பகுதியில் வசித்து வரும் பூபதியின் மாமனார் செங்கோட்டையன் வீட்டிலும் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தினர். இந்த இரு வீடுகளில் சுமார் 8 மணி நேரம் நீடித்த சோதனையில் ஆவணங்களை மட்டும் போலீசார் எடுத்து சென்றனர்.

எஸ்.ஐ பூபதி கடந்த 2018-ம் ஆண்டில் ராசிபுரம் காவல் நிலையத்தில் பணியாற்றிய
போது ஜெயராஜன் என்பவரிடம், ஜெயராஜனின் மகன் சக்திவேலுக்கு வேலை வாங்கி தருவதாக ரூ. 9 லட்சத்து 60 ஆயிரமும் மற்றும் உறவினர் வெற்றிவேலுக்கு வேலை வாங்கி தருவதாக ரூ.7 லட்சத்து 60 ஆயிரம் பெற்று கொண்டு மோசடி செய்து விட்டதாக கூறப்படுகிறது.

இதேபோல் ஜெயராஜன் பங்குதாரராக உள்ள நிதிநிறுவனத்தில், 2 கார்களின் ஆவணங்களை அடகு வைத்து ரூ.10 லட்சம் பெற்றதாகவும், அவரது மனவைி பெயரில் உள்ள நில ஆவணத்தை வைத்து ரூ.3 லட்சம் வாங்கியதாகவும் தெரிகிறது.

எனவே அட்ரின் போஸ்கோவிடம் இருந்து வரவேண்டி சுமார் ரூ.30 லட்சம் பணத்தை
திரும்ப பெற்றுத்தர கோரி, ஜெயராஜன், எஸ்.ஐ பூபதியிடம் முறையிட்டுள்ளார்.
இந்த பிரச்னையை முடித்து வைக்க ஜெயராஜனிடம் ரூ.5 லட்சம் லஞ்சம் கேட்டுள்ளார்.

முதற்கட்டமாக ஜெயராஜன் ரூ.2 லட்சம் கொடுத்து உள்ளார்; இருப்பினும் அட்ரின்
போஸ்கோவிடம் இருந்து பணத்தை பெற்றுக்கொடுக்காமல் காலம் தாழ்த்தி வந்ததால்
மனமுடைந்த ஜெயராஜன் லஞ்ச ஒழிப்பு துறையினரிடம் 2020 ஆம் ஆண்டில் புகார்
அளித்துள்ளார்.

இதனடிப்படையில் நாமக்கல் லஞ்ச ஒழிப்பு போலீசார், பூபதி மீது  வழக்குப்பதிவு செய்து, அவரது வீட்டிலும், உறவினர்கள் வீடுகளிலும் சோதனை நடத்தியது குறிப்பிடத்தக்கது. வேலை வாங்கி தருவதாக கூறி நிதிநிறுவன அதிபரிடம் பணத்தை ஏமாற்றிய நபரிடம் இருந்து , பணத்தை மீட்க உதவி ஆய்வாளர் லஞ்சம் வாங்கியதாக எழுந்துள்ள குற்றச்சாட்டு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

ரெ. வீரம்மாதேவி

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.