நாகையில் 7 ஆண்டுகளாக குழந்தை இல்லாமல் தவித்த பெற்றோரின் குழந்தை 540 கிராம் எடையில் குறை பிரசவத்தில் பிறந்ததையடுத்து, 100 நாட்கள் போராடி காப்பாற்றி சாதனை படைத்த அரசு மருத்துவர்களுக்கு கண்ணீர் மல்க அப்பெற்றோர் நன்றி தெரிவித்தனர்.
நாகை மாவட்டம் கோகூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சரண்யா. இவர் திருவாரூர் மாவட்டம் கொராடச்சேரி பகுதியைச் சேர்ந்த முருகதாஸ் என்பவரை திருமணம் செய்து கடந்த 7 ஆண்டுகளாக குழந்தை இல்லாமல் இருந்து வந்தனர். மனகஷ்டத்தில் இருந்த அவர்கள் பல்வேறு தனியார் மருத்துவமனைகளை அணுகி எந்த பலனும் அளிக்காத நிலையில், தனது தாயின் வீட்டிற்கு வந்து தங்கிய சரண்யா நாகை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை எடுத்துள்ளார். அதனைத் தொடர்ந்து சரண்யா கருவுற்றதையடுத்து நாகை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை மற்றும் மருத்துவம் செய்து வந்துள்ளார்.
பின்னர், 7 வருடம் ஏமாற்றத்திற்கு பலன் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் இருந்த சரண்யாவிற்கு கடந்த ஏப்ரல் மாதம் 26 ஆம் தேதி குறை பிரசவத்தில் பெண் குழந்தை பிறந்தது. 540 கிராம் எடையில் குறை மாதத்தில் பிறந்த குழந்தையைக் கண்டு சரண்யாவின் உறவினர்கள் கவலை அடைந்தனர். ஆனால், 540 கிராம் எடையில் பிறந்த குழந்தையை காப்பாற்றி 100 நாட்களாகப் போராடி இன்று பெற்றோர்களிடம் மருத்துவர்கள் ஒப்படைத்தனர்.
குழந்தையை எப்படியாவது காப்பாற்ற வேண்டும் என்று முடிவெடுத்த நாகை அரசு மருத்துவர்கள் குழந்தையை இன்குபெட்டர் கருவியில் வைத்து நம்பிக்கையோடு சிகிச்சையைத் தொடங்கினர். தாய்ப்பால் குடிக்கும் திறன் இல்லாமல், மூச்சு திணறல், கிருமி தொற்று, இரத்த சோகை போன்ற பல்வேறு பிரச்னைகளால் இருந்த குழந்தையை தரமான சிகிச்சையால் காப்பாற்றியுள்ளனர்.
குறிப்பாக செயற்கை சுவாசம் மற்றும் உயிர் காக்கும் மருந்துகள் கொடுக்கப்பட்டு 30 நாட்களில் குழந்தையை மீட்ட மருத்துவர்கள், பின்னர் தாய்ப்பால் எடுத்து பாலாடை மூலம் குழந்தைகளுக்குப் பாலூட்டி பின்னர் நேரடியாக தாய் பால் கொடுக்க பயிற்சி அளித்து 540 கிராமில் பிறந்த குழந்தையை 1.5 கிலோ எடைக்கு கொண்டு வந்துள்ளனர். 100 நாட்களை தாண்டி தமிழ்நாட்டில் 600 கிராமிற்கு கீழ் பிறந்த குழந்தைகளில் 10ஆவது குழந்தையை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் நேற்று நடந்த தாய்ப்பால் வார நிறைவு விழாவில் பெற்றோர்களிடம் நாகை மாவட்ட ஆட்சியர் ஜானி டாம் வர்கீஸ் மகிழ்ச்சியோடு ஒப்படைத்தார்.
இதனைத்த்டர்ந்து, குழந்தைக்குத் தேவையான ஊட்டச்சத்து பெட்டகம் மற்றும் மருத்துவ ஆலோசனைகளை மருத்துவர்கள் வழங்கினர். நாகையில் 540 கிராம் எடை கொண்ட குழந்தையைப் போராடி காப்பாற்றி 100 நாட்களுக்குப் பிறகு பெற்றோர்களிடம் ஒப்படைத்த நாகை அரசு மருத்துவர்களுக்குப் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.
சௌம்யா.மோ
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.