நாகை மீனவர்களை தாக்கிய இலங்கை கடற்கொள்ளையர்கள் 8 பேர் மீது வேதாரண்யம் கடலோர போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
நாகை அடுத்த செருதூர் மீனவ கிராமத்தில் இருந்து சக்தியாலன் என்பவருக்கு
சொந்தமான படகில் ஹரிகிருஷ்ணன், சூர்யா, கண்ணன், சிரஞ்சீவி, படகு
உரிமையாளர் சக்திபாலன் உள்ளிட்ட 5 பேரும் கோடியக்கரை அருகே 10 கடல் மைல்
தொலைவில் 26ந் தேதி அதிகாலை மீன் பிடித்துக் கொண்டிருக்கும் போது 2 அதிவேக
பைபர் படகில் இந்திய எல்லைக்குள் நுழைந்த இலங்கை கடற்கொள்ளையர்கள், செருதூரை சேர்ந்த 5 மீனவர்களையும் கடுமையான ஆயுதங்களால் தாக்கி, 550 கிலோ வலை,50ஆயிரம் மதிப்பிலான மீன்கள் , வாக்கிடாக்கி, ஜி.பி.எஸ் கருவி,
பேட்டரி உள்ளிட்ட பொருட்களை கொள்ளையடித்து கொண்டு, விரட்டி அடித்துள்ளனர்.
அதனையடுத்து, மீனவர்கள் அவசர அவசரமாக செருதூர் கடற்கரைக்கு வந்து, பின்னர் நாகை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பாக சக்திபாலன் கொடுத்த புகாரின் பேரில், வேதாரண்யம் கடலோர காவல் டி.எஸ்.பி சுந்தர் இன்ஸ்பெக்டர் ஜோதி முத்துராமலிங்கம் மற்றும் போலீசார், அடையாளம் தெரியாத இலங்கை கடல் கொள்ளையர்கள் 8 பேர் மீது வழிப்பறி மற்றும் பயங்கர ஆயுதங்களால் தாக்குதல் ஆகியவை தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ரூபி.காமராஜ்







