நெல்லையில் காணாமல் போன காங்கிரஸ் கிழக்கு மாவட்ட தலைவர் ஜெயக்குமார் தனசிங்கின் உடல் பாதி எரிந்த நிலையில் உவரி அருகே சடலமாக மீட்கப்பட்டுள்ளது.
நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவராக இருந்தவர் ஜெயக்குமார் தனசிங். இவர் தனக்கு அடிக்கடி கொலை மிரட்டல்கள் வருவதாகவும், தனது வீடு மற்றும் அலுவலகத்திற்கு முன்பாக அடையாளம் தெரியாத நபர்கள் நடமாடுவதாகவும் ஏற்கனவே காவல்துறையில் புகார் அளித்திருந்தார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்த நிலையில், அவரை 2 நாட்களாக காணவில்லை என்று அவரது மகன் காவல்துறையில் புகார் அளித்தார். இதனடிப்படையில் போலீசார் விசாரணை மேற்கொண்ட நிலையில் அப்பகுதியில் உள்ள தோட்டத்தில் ஜெயகுமார் தனசிங் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். உடல் பாதி எரிந்த நிலையில் காணப்படுவதால் அவரை கொலை செய்தது யார் என்ற கேள்வி எழுந்துள்ளது.
இதுதொடர்பாக 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக நெல்லை காவல் கண்காணிப்பாளர் சிலம்பரசன், நியூஸ் 7 தமிழ் தொலைக்காட்சிக்கு தெரிவித்துள்ளார்.
முன்னதாக தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாக மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளருக்கு ஜெயகுமார் தனசிங் கடிதம் எழுதியிருந்தார். இந்நிலையில் இப்போது சடலமாக மீட்கப்பட்டுள்ளது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.