கடந்தாண்டு நடைபெற்ற தேர்தலில் முறைகேடு நடந்திருப்பதால் மியான்மரில் ஓராண்டுக்கு ராணுவ ஆட்சி அமல்படுத்தப்படுகிறது என அந்நாட்டு ராணுவம் அறிவித்துள்ளது.
மியான்மார் நாட்டில் 50 ஆண்டுகள் இராணுவ ஆட்சி நடைபெற்றது. இதற்கெதிராக ஆங் சான் சூகி கடுமையாக போராடி வந்தார். அதனையடுத்து எழுந்த மக்கள் போராட்டம் காரணமாக கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடைபெற்ற அதிபர் தேர்தலில் ஜனநாயக லீக் கட்சி வெற்றி ஆட்சியை கைப்பற்றியது. ஆனால், இந்த தேர்தலில் முறைகேடு நடந்திருப்பதாக மியான்மர் ராணுவம் குற்றம்சாட்டி அதிபர் மற்றும் தேர்தல் அதிகாரிகள் மீது உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இதற்கு, தேர்தல் ஆணையம் தொடர்ந்து மறுப்பு தெரிவித்து வந்தது. இந்நிலையில், மியான்மர் அதிபர் வின் மைன்ட் மற்றும் ஆளுங்கட்சியின் முக்கியத் தலைவர் ஆங் சான் சூச்சி உள்ளிட்டோர் அந்நாட்டு ராணுவத்தின் அதிரடியால் கைது செய்யப்பட்டுள்ளனர். இதனால், அங்கு பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, பொதுத்தேர்தலில் முறைகேடு நடந்திருப்பதால் அவசர நிலை சட்டம் அமல்படுத்தப்பட்டு இன்னும் ஓராண்டிற்கு ராணுவ ஆட்சி அமல்படுத்தப்படும் என்று அந்நாட்டு ராணுவம் தெரிவித்துள்ளது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இன்று அங்கு நாடாளுமன்றம் கூட இருந்த நிலையில் ராணுவம் மேற்கொண்ட இந்த நடவடிக்கையால் அரசியல் கட்சி மற்றும் உறுப்பினர்களிடையே பரபரப்பு நிலவி வருகிறது. இதனால், தலைநகர் நேபிதா மற்றும் முக்கிய நகரான யாங்கூனின் வீதிகளில் ராணுவ வீரர்கள் குவிக்கப்பட்டுள்ளனர். அத்துடன் பல்வேறு முக்கிய நகரங்களில் தொலைத் தொடர்பு சேவையையும் துண்டித்துள்ளனர். இதனால், நாடு முழுவதும் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அமெரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகள் கைது செய்யப்பட்டுள்ள தலைவர்களை விடுவிக்குமாறு ராணுவத்துக்கு கோரிக்கை விடுத்துள்ளன.