8 மாத குழந்தையை 25 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்து விட்டு நாடகமாடிய தாய் கைது செய்யப்பட்டார். குழந்தையை வாங்கிய தம்பதியையும் போலீசார் கைது செய்தனர்.
கிருஷ்ணகிரி அடுத்த மாதேப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் வெங்கடேசன். இவரது மனைவி தனலட்சுமி. இவர்களுக்கு 8 வயதில் கமலினி என்ற பெண் குழந்தையும், 4 வயதில் ராம் பிரசாத் என்ற ஆண் குழந்தையும், 8 மாத கை குழந்தையும் உள்ளனர். இந்நிலையில் கடந்த 12ம் தேதி தனது கைக்குழந்தை, கிருஷ்ணகிரி புதிய பேருந்து நிலையத்தில் காணாமல் போய்விட்டதாக வெங்கடேசன், காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இவரது புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்து குழந்தையின் தாய் தனலட்சுமி இடம் விசாரித்தனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
தனலட்சுமி பேருந்து நிலையத்தில் உள்ள கழிவறைக்கு செல்லும் போது கட்டணம் வசூலிக்கும் இடத்தின் அருகே குழந்தையை படுக்க வைத்து விட்டு சென்றதாகவும் திரும்பி வந்து பார்த்தபோது குழந்தையை காணவில்லை என்றும் தெரிவித்தார். போலீசார் பேருந்து நிலையத்தில் வைக்கப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்ததில் தனலட்சுமியின் பதிலில் சந்தேகம் எழுந்தது.
தனலட்சுமி முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்ததால் போலீசார் தங்கள் பாணியில் விசாரணை மேற்கொண்டனர். அப்போது திடுக்கிடும் உண்மைகள் பல வெளிவந்தன. போலீசாரின் விசாரணையில் தனலட்சுமி தனது 8 மாத குழந்தையை 25,000 ரூபாய்க்கு விற்பனை செய்துவிட்டு காணவில்லை என நாடகமாடியது தெரியவந்தது.
திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த உதயா, சுமதி தம்பதியினர் தங்களுக்கு பல வருடங்களாக குழந்தை இல்லாததால், தங்களுக்கு குழந்தை வேண்டும் என சமூக வலைதளத்தில் பதிவிட்டு இருந்தனர். இதையடுத்து தனலட்சுமி, உதயா தம்பதியினரை தொடர்பு கொண்டுள்ளார். ஏற்கனவே தனக்கு 8 வயதில் பெண்குழந்தை இருப்பதால், 3-வதாக பிறந்த பெண்குழந்தையை வளர்க்க சிரமமாக உள்ளது. எனவே 8 மாத கைக்குழந்தையை கொடுக்க தயாராக இருப்பதாக தனலட்சுமி கூறியுள்ளார். குழந்தையை கொடுக்க வேண்டுமானால் தனக்கு ரூ.25 ஆயிரம் பணம் தரவேண்டும் என தனலட்சுமி கூறியுள்ளார். குழந்தையை விற்பது குறித்து தன் கணவனுக்கு தெரியாது எனவும் தனலட்சுமி கூறியுள்ளார்.
இதையடுத்து உதயா மற்றும் சுமதி தம்பதியினர் கிருஷ்ணகிரிக்கு வந்து தனலட்சுமியிடம் குழந்தையை பெற்றுக்கொண்டு 25 ஆயிரம் ரூபாய் பணத்தை கொடுத்துள்ளனர். தனலட்சுமி தனது குழந்தையை 25 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்துவிட்டு தனது கணவர் மற்றும் காவல்துறையினரிடம் குழந்தை காணாமல் போய்விட்டதாக நாடகம் ஆடியுள்ளார். மனைவியின் இந்த நாடகம் பற்றி அறியாத வெங்கடேசன் காவல் நிலையத்தில் புகார் அளித்த நிலையில் போலீஸ் விசாரணையில் தனலட்சுமியின் நாடகம் அம்பலமாகி உள்ளது.
குழந்தை விற்பனை செய்யப்பட்டது உறுதியான நிலையில் கிருஷ்ணகிரி நகர போலீசார் உடனடியாக திருப்பூரில் இருந்த குழந்தையை மீட்டு தந்தை வெங்கடேசன் இடம் ஒப்படைத்தனர். மேலும் குழந்தையை விற்பனை செய்த தாய் தனலட்சுமி மற்றும் உரிய சட்ட விதிகளை பின்பற்றாமல் குழந்தையை தத்தெடுத்த உதயா, சுமதி தம்பதியினரையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.