மத்திய வெளியுறவுத்துறை இணை அமைச்சர் முரளிதரன், சிரிய நாட்டு தூதரை சந்தித்து ஆறுதல் தெரிவித்துள்ளார்.
துருக்கி மற்றும் சிரியாவில் ஏற்பட்ட பலத்த நிலநடுக்கம் உலகம் முழுவதையும் பேரதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இந்த பேரிடரில் சிக்கி சுமார் 5,000க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். பல ஆயிரக்கணக்கானோர் காயமடைந்துள்ளனர். உலக நாடுகள் துருக்கி மற்றும் சிரியாவுக்கு உதவிக்கரம் நீட்டி வருகின்றன.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்நிலையில் மத்திய வெளியுறவுத்துறை இணை அமைச்சர் முரளிதரன், சிரியா நாட்டின் தூதரகத்துக்கு சென்றார். நிலநடுக்கம் தொடர்பாக அங்கு அந்த நாட்டின் தூதர் பஸாம் அல் கட்டிப்பை சந்தித்து பேசினார். பிரதமர் மோடியின் அனுதாபத்தை சொல்லிவிட்டு, அந்த நாட்டுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் இந்தியா செய்யும் என்று கூறியுள்ளார்.
இதுகுறித்து இந்தியாவுக்கான சிரிய தூதர் கூறுகையில், “அன்புமிக்க இந்திய நாட்டு சகோதரர்கள் மற்றும் அரசு சார்பாக எங்கள் துக்கத்தை பகிர வந்துள்ளனர். இந்த பேரிடரில் சுமார் 850க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். 1,000க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். பல நட்புறவு நாடுகளின் உதவியால் நிலைமை சற்று முன்னேறி வருகிறது. பேரிடர் நடந்தது முதல் இந்தியா எங்களுக்கு துணையாக நிற்கிறது.
சம்பவம் நடைபெற்ற உடனே எனக்கு டமாஸ்கஸில் (சிரியா தலைநகரம்) அழைப்புகள் வரத்தொடங்கின.
இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்தை தொடர்பு கொண்ட தருணம் முதலே அவர்கள் பதிலளிக்க தொடங்கினார்கள். சிரியாவுக்கு உதவ திட்டம் போட்டுவிட்டோம் என்று சொல்லி உடனடியாக நிவாரணம் மற்றும் உபகரணங்களை வழங்கினர். இதுதான் இந்தியா. இதே போலத்தான் இந்தியா எதிர்காலத்தை கட்டமைக்க போகிறது. தெற்கு மற்றும் நல்ல எதிர்காலத்துக்கு காத்திருப்பவர்களுக்கு இந்தியா அரணாக நிற்கும்.” என்று கூறியுள்ளார்.
அதேபோல மீட்புப் பணிக்காக, தேசிய பேரிடர் மீட்புக் குழுவை துருக்கிக்கு அனுப்பப்பட்டுள்ளனர். இதற்கு அந்த நாட்டு அரசு நன்றியும், பாராட்டுகளையும் தெரிவித்துள்ளது.
-ம.பவித்ரா