மொராக்கோ நாட்டில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை இரண்டாயிரத்தை தாண்டியுள்ளது.
வடக்கு ஆப்பிரிக்க நாடான மொராக்கோவில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 7.2 ஆக பதிவான இந்த நிலநடுக்கத்தால் கட்டடங்கள் இடிந்து விழுந்தன. மராகேஷ் அருகே 18.5 கிலோமீட்டர் ஆழத்திற்கு நிலநடுக்கம் உணரப்பட்டதாக அமெரிக்க நிலநடுக்க ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சக்திவாய்ந்த நிலடுக்கத்தால் கட்டடங்கள் இடிந்து விழுந்தன. வீடுகளில் உறங்கிக் கொண்டிருந்த மக்கள் இடிபாடுகளுக்குள் சிக்கிக்கொண்டனர். இதில் 2 ஆயிரத்து 12 பேர் உயிரிழந்துள்ளதாகவும், ஆயிரத்து 400-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்ததாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
இந்த நிலநடுக்கம் ஸ்பெயின் மற்றும் போர்ச்சுகல், அண்டை நாடான அல்ஜீரியாவிலும் உணரப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. பலி எண்ணிக்கை மேலும் உயரக்கூடும் என அஞ்சப்படுகிறது.கட்டட இடிபாடுகளுக்குள் சிக்கியவர்களை மீட்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
மொராக்கோ தலைநகர் ரபாத் முதல் மாரகெச் வரை நிலநடுக்கத்தால் சேதம் ஏற்பட்டிருப்பதாகவும், நாட்டில் அதிக சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் பகுதிகளிலும் பயங்கர பாதிப்பு ஏற்பட்டிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.







