தமிழ்நாட்டில் குரங்கம்மை பாதிப்பா? – அமைச்சர் விளக்கம்

தமிழ்நாட்டில் குரங்கம்மை பாதிப்பு வந்தால் அதனை நாங்களே தெரிவிப்போம் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.   சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், 15 இடங்களில் 30 வயதை கடந்த மகளிருக்கு…

தமிழ்நாட்டில் குரங்கம்மை பாதிப்பு வந்தால் அதனை நாங்களே தெரிவிப்போம் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

 

சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், 15 இடங்களில் 30 வயதை கடந்த மகளிருக்கு ஆரம்ப நிலை புற்றுநோய் கண்டறியும் முகாம் தொடங்கப்பட்டுள்ளது என்றார். பல்வேறு வகையில் உள்ள புற்றுநோய் கண்டறியும் வகையில் இந்த முகாம் நடைபெற இருப்பதாகவும் அவர் கூறினார்.

 

காஞ்சிபுரத்தில் அண்ணா புற்றுநோய் ஆராய்ச்சி மையம் ஒன்று அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இன்னும் ஓராண்டில் புற்று நோய் ஆராய்ச்சி மையம் தொடங்கப்படும். தமிழ்நாட்டை பொருத்தவரை தற்போது வரை குரங்கம்மை பாதிப்பு இல்லை என தெரிவித்த அவர், அப்படி குரங்கம்மை பாதிப்பு வந்தால் அதனை நாங்களே தெரிவிக்கிறோம் என விளக்கமளித்தார்.

 

குரங்கம்மை பாதிப்பு இல்லவே இல்லை என்று நாங்கள் கூற வில்லை என தெரிவித்த அமைச்சர், பன்னாட்டு விமான நிலையம் உள்ள மாநிலங்களான சென்னை, கோவை, திருச்சி, மதுரை உள்ளிட்ட ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள அரசு மருத்துவமனையிலும் 10 படுக்கைகளுடன் மையம் அமைக்கப்பட்டுள்ளது. குரங்கம்மை பாதிப்பு நேரிட்டால் அவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்கவும் மருத்துவர்கள் தயார் நிலையில் உள்ளனர் என்றும் அவர் தெரிவித்தார்.

ஆசாரி பள்ளம் மற்றும் திருச்சி இரண்டு இடத்திலும் குரங்கம்மை பாதிப்பு இருப்பதாக தவறான வதந்திகள் பரவுவதாகவும், இதனை யாரும் நம்ப வேண்டாம் என்றும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார். நிச்சயமாக குரங்கம்மை பாதிப்பு நடவடிக்கையில் அரசு வெளிப்படையாக இருக்கும் என்றும் ஊடகங்கள் இதனை பெரிது படுத்த வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறோம் என தெரிவித்தார்.

 

– இரா.நம்பிராஜன்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.