“திருக்குறள் வழியில் மோடி ஆட்சி” – மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பேச்சு!

சி.பி.ராதாகிருஷ்ணனை குடியரசு துணைத் தலைவர் வேட்பாளராக அறிவித்த பிரதமர் மோடிக்கு நன்றி என மத்திய அமைச்சர் அமித் ஷா தெரிவித்தார்.

 

பாஜக பூத் கமிட்டி மாநாடு நடைபெற்று வரும் நிலையில், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா உரையாற்றினார். அப்போது பிரதமர் மோடியின் ஆட்சி முறை, மற்றும் சி.பி. ராதாகிருஷ்ணன் குடியரசு துணைத் தலைவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டது குறித்துப் பேசினார்.

அமித் ஷா தனது உரையில், பிரதமர் மோடியின் ஆட்சி திருக்குறள் அடிப்படையில் நடப்பதாகப் பாராட்டினார். “ஒரு நல்ல அரசன், சிறந்த சேனையைக் கொண்டவனாக இருக்க வேண்டும்” என்ற திருக்குறளின் கருத்துக்கு ஏற்ப, பிரதமர் மோடி ஆட்சி செய்கிறார் என்றும், அவரது அரசாங்கம் வலிமையானதாகவும், மக்களைக் காப்பதாகவும் உள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.

மேலும், சி.பி. ராதாகிருஷ்ணனை குடியரசு துணைத் தலைவர் வேட்பாளராக அறிவித்ததற்குப் பிரதமர் மோடிக்கு அவர் நன்றி தெரிவித்தார். “அடுத்த நாடாளுமன்றக் கூட்டத்தொடர் தொடங்கும்போது, சி.பி. ராதாகிருஷ்ணன் இந்தியாவின் புதிய குடியரசு துணைத் தலைவராக இருப்பார்” என்று அமித் ஷா நம்பிக்கைத் தெரிவித்தார்.

இந்த அறிவிப்பு, தமிழ்நாட்டுக்குக் கொடுக்கப்பட்ட முக்கியத்துவமாகவும், தமிழகத்தின் அரசியல் வட்டாரத்தில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.