செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணியின் தேர்தல் பிரசார பொதுக்கூட்டம் இன்று நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில் பாஜக மாநிலத்தலைவர் நயினார் நாகேந்திரன் கூட்டணி கட்சி தலைவர்களை வரவேற்று பேசினார். அவர் பேசியதாவது ;
“மதுராந்தகத்தில் நடக்கும் கூட்டத்தால் சென்னை சட்டமன்றத்தில் இன்று பெரிய பதற்றம். பல செடிகளில் பூத்த மலர்கள் மாலையாகி இறைவனிடத்தில் சேருவது போலதேசிய ஜனநாயக கூட்டணியின் தலைவர்கள் இன்று ஒன்று சேர்ந்திருக்கிறார்கள். மோடி சென்னைக்கு வந்ததும் சூரியன் மறைந்துவிட்டது. நிச்சயமாக ஆட்சி மாற்றம் ஏற்படப்போவது உறுதி. அதற்கான வேலைகளை பிரதமர் மோடியும், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியும் செய்து கொண்டிருக்கிறார்கள்.
திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றமுடியவில்லை. சனாதனத்தை ஒழிப்போம் எனக் கூறுகிறார்கள். உதயநிதி ஸ்டாலினை முதலமைச்சராக்க வேண்டும் என்பதே அவர்கள் நோக்கம். மக்கள் மீது அக்கறை கொண்ட பிரதமர் மோடி 11 மருத்துவ கல்லூரிகளையும், 11 வந்தே பாரத் ரயில்களையும் தமிழ்நாட்டிற்கு கொடுத்துள்ளார். மேலும் அவர் இந்த கடந்த 11 ஆண்டு காலத்தில் 14 லட்சம் கோடி ரூபாய் நிதியை தமிழ்நாட்டிற்கு அளித்துள்ளார்.







