பாஜக முன்னாள் தேசியச் செயலாளர் ஹெச்.ராஜா மீது மனித நேய மக்கள் கட்சி சார்பாக புகாரளிக்கப்பட்டுள்ளது.
பாஜக தேசியச் செயலாளர் ஹெச்.ராஜாவின் பேச்சுக்கள் பல நேரங்களில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இவை தொடர்பாக பல காவல் நிலையங்களில் அவர் மீது புகாரும் அளிக்கப்பட்டுள்ளது. இதனிடையே அண்மையில் பேட்டியளித்த ஹெச்.ராஜா, நடிகர் சிவகார்த்திகேயனின் அப்பாவைக் கொன்றது பாபநாசம் தொகுதி எம்எல்ஏவும், மனிதநேய மக்கள் கட்சியின் தலைவருமான ஜவாஹிருல்லா என்று பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது.
இதற்கு மனிதநேய மக்கள் கட்சியைச் சேர்ந்தவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த நிலையில் ஜவாஹிருல்லா தரப்பில் இருந்து மனிதநேய மக்கள் கட்சியின் மாநில வழக்கறிஞர் பிரிவு செயலாளர் அப்ரார், ஹெச்.ராஜாவுக்கு எதிராக டிஜிபி அலுவலகத்தில் இன்று புகாரளித்தார்.
அதில், “சிவகார்த்திகேயனின் தந்தை பெயர் தாஸ். ஆனால், ஹெச்.ராஜா சிவகார்த்திகேயனின் தந்தையை ஜெயபிரகாஷ் எனக் குறிப்பிட்டு கொலை செய்யப்பட்டதாக உண்மைக்கு புறம்பான தகவலைக் கூறியுள்ளார். எனவே ஹெச்.ராஜா மீது குற்ற வழக்கு பதிவு செய்ய வேண்டும்” என்று வலியுறுத்தியுள்ளார்.







