தாய் தமிழ்நாட்டுக்குச் சேவை செய்யும் வாய்ப்பு: மு.க.ஸ்டாலின் நன்றி

தாய்த் தமிழ்நாட்டுக்குச் சேவை செய்ய வாய்ப்பு வழங்கிய தமிழக மக்களுக்கு நன்றி என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். தமிழக சட்டசபை தேர்தலில், தி.மு.க. 125 தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கிறது. முதலமைச்சராக…

தாய்த் தமிழ்நாட்டுக்குச் சேவை செய்ய வாய்ப்பு வழங்கிய தமிழக மக்களுக்கு நன்றி என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

தமிழக சட்டசபை தேர்தலில், தி.மு.க. 125 தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கிறது. முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் இன்று பதவி ஏற்றுக்கொண்டார். ஆளுநர் மாளிகையில் இந்தப் பதவி ஏற்பு விழா எளிமையாக நடைபெற்றது. மு.க.ஸ்டாலினுக்கு தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித், பதவிப் பிரமாணமும் ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார். மு. க ஸ்டாலினுடன் 33 அமைச்சர்களும் பதவியேற்றுக் கொண்டனர்.

பின்னர், பெரியார், அண்ணா, கருணாநிதி ஆகியோர் நினைவிடங்களில் மரியாதை செலுத்திய ஸ்டாலின், அன்பழகன் இல்லத்துக்கு சென்று அவர் புகைப்படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். பின்னர் தலைமை செயலகம் சென்ற அவர், ஐந்து கோப்புகளில் அவர் கையெழுத்திட்டார்.

இந்நிலையில், தாய்த் தமிழ்நாட்டுக்குச் சேவை செய்ய வாய்ப்பு வழங்கிய தமிழ்நாட்டு மக்களுக்கு நன்றி என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

இதுகுறித்து ட்விட்டரில் அவர், ’முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் எனும் நான்’ என்று கூறி இன்று தமிழகத்தின் முதலமைச்சராகப் பொறுப்பேற்றுக் கொண்டேன்! காவிரிக் கரையாம் தஞ்சை மண்ணின் – திருவாரூரைச் சார்ந்த எனக்கு தாய்த் தமிழ்நாட்டுக்குச் சேவை செய்திட மாபெரும் வாய்ப்பை வழங்கிய தமிழ்நாட்டு மக்களுக்கு நன்றி! என்று தெரிவித்துள்ளார்.

இதையடுத்து முதலமைச்சராக பதவியேற்ற தனக்கு வாழ்த்துக் கூறிய பிரதமர் மோடி, கேரள முதல்வர் பினராயி விஜயன் ஆகியோருக்கும் முதல்வர் ஸ்டாலின் நன்றி தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.