பொதுமக்களிடம் கனிவாகவும் நேர்மையாகவும் நடந்து கொள்ளாமல், அலட்சியமாக செயல்பட்ட மதுரவாயல் வட்டாட்சியர், வருவாய் ஆய்வாளர் ஆகிய 2 பேரை பணியிடை நீக்கம் செய்து வருவாய்த்துறை அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் உத்தரவிட்டுள்ளார்.
சென்னை மதுரவாயல் வட்டாட்சியர் அலுவலகத்தில் வருவாய் நிர்வாக ஆணையர் சித்திக் நேற்று திடீரென ஆய்வு மேற்கொண்டார். அதில் மதுரவாயல் வட்டாட்சியர் அலுவலகத்தில் பணிபுரியும் அரசு ஊழியர்கள் பொதுமக்களிடம் தன்மையாகும், கனிவாகவும், நேர்மையாகவும் நடந்து கொள்ளாமல், மிகவும் அலட்சியமாகவும் செயல்பட்டது தெரியவந்தது. சில ஊழியர்கள் பொதுமக்களிடம் கையூட்டு பெற்று தொந்தரவு செய்ததும் கண்டறியப்பட்டது.
இதனையடுத்து மதுரவாயல் வட்டாட்சியரையும் (திரு. முரளி), வருவாய் ஆய்வாளரையும் (திருமதி. சோபியா) தற்காலிகப் பணி நீக்கம் செய்தும் அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர்.ராமசந்திரன் ஆணையிட்டுள்ளார்.
அனைத்து மாவட்ட ஆட்சியர்களும் தங்களது மாவட்ட வருவாய் அலுவலகத்தில் நேரடியாக ஆய்வு மேற்கொண்டு முறையற்ற வகையில் பணியாற்றும் ஊழியர்களை கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் K.K.S.S.R. இராமச்ந்திரன் அறிவுறுத்தியுள்ளார்.







