அதிமுக ஆட்சியின் குளறுபடிகள் காரணமாக நகராட்சி வரி வருவாய் தடைபட்டுள்ளதாக பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு குற்றஞ்சாட்டியுள்ளார்.
திருவண்ணாமலை தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தை பொதுப்பணித் துறை அமைச்சரும் திருவண்ணாமலை சட்டமன்ற உறுப்பினருமான எ.வ.வேலு திறந்து வைத்தார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், இந்த சட்டமன்ற அலுவலகத்தில் பொதுமக்களுக்கு பயன்படும் அனைத்து விதமான மனுக்களும் இலவசமாக வழங்கப்படும் என தெரிவித்தார். மேலும், நூலகம், கணினி மற்றும் தையல் பயிற்சி மையங்கள் உள்ளிட்டவை செயல்படுத்தப்படவுள்ளதாகவும் அவர் கூறினார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
திருவண்ணாமலை மாவட்டத்தில் காவிரி கூட்டுக் குடிநீர் திட்டத்தை அமைக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் மனு அளித்துள்ளதாகக் கூறிய அவர், திருவண்ணாமலை புறவழிச்சாலையில் விரைவில் மத்திய பேருந்து நிலையம் அமைக்கப்படும் எனவும் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அமைச்சர் எ.வ.வேலு, தமிழ்நாட்டில் நகராட்சிகள் மூலம் வரும் வருவாய்கள் முறையாக கிடைப்பதில்லை எனவும், முந்தைய ஆட்சியில் வரி வசூலிப்பதில் ஏற்பட்ட குளறுபடிகள் காரணமாகவே வருவாய் தடைபட்டுள்ளதாகவும் குற்றஞ்சாட்டினார்.