தமிழ்நாட்டில் அம்மா உணவகம் போன்று வரும் நாட்களில் 500 கலைஞர் உணவகங்கள் தொடங்கப்படும் என அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார்.
மத்திய உணவுத்துறை அமைச்சர் பியூஸ் கோயல் அனைத்து மாநில உணவுத்துறை அமைச்சர்களுடன் டெல்லியில் ஆலோசனை நடத்தினார். இதில் தமிழ்நாடு சார்பில் உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி கலந்து கொண்டார். பின்னர் செய்தியர்களை சந்தித்த அவர், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவுப்படி நான் கலந்து கொண்டேன். தமிழ்நாட்டில் நியாய விலை கடைகள் மூலம் குறைந்த விலையில் உணவு பொருட்கள் விற்பனை நடைபெற்று வருகிறது என தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், மு.க.ஸ்டாலின் முதலமைச்சராக பொறுப்பேற்ற பிறகு கொரோனா காலத்தில் தலா 4 ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டது. விரைவில் பொங்கல் தொகுப்பு வழங்கப்பட உள்ளது என கூறினார். மேலும், தமிழ்நாடு அரசின் கோரிக்கையை ஏற்று நெல் கொள்முதலுக்கான ஈரப்பதத்தை 19 சதவீதமாக அதிகரித்து மத்திய அரசு அனுமதி வழங்கியிருப்பதாக தெரிவித்தார். தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டது போல் தமிழ்நாட்டில் வரும் நாட்களில் 500 கலைஞர் உணவகங்கள் தொடங்கப்படும் என்றும், அம்மா உணவகம் தொடர்ந்து செயல்படும் என்றும் அமைச்சர் சக்கரபாணி தெரிவித்தார்.







