அணு ஆயுதம் தயாரிப்பது தொடர்பாக பேச்சுவார்த்தையில் உடன் எட்டப்படாததால், கடந்த மாதம் 28 ஆம் தேதி ஈரான் தலைநகர் டெஹ்ரானில் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் கூட்டுத் தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் ஈரானின் உச்ச தலைவராக இருந்த ஆயத்துல்லா காமேனி கொல்லப்பட்டார். இதனை தொடர்ந்து மத்திய கிழக்கில் போர் நடைபெற்று வருகிறது.
இதற்கிடையில் கடந்த பிப். 28 அன்று ஈரானின் மினாப் நகரத்திலுள்ள பள்ளிக்கூடத்தின் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியது.
இந்தத் தாக்குதலில், குழந்தைகள் , ஆசிரியர்கள் உள்பட 160க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். இந்தத் தாக்குதலால் அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுக்கு எதிராக சர்வதேச அளவில் கண்டனங்கள் எழுந்தன.
இந்த நிலையில் இன்று ஐ.நா. மனித உரிமை கவுன்சிலில் நடைபெற்ற விவாதத்தில் பேசிய ஈரானின் வெளியுறவுத்துறை அமைச்சர் அப்பாஸ் அராக்சி கூறியதாவது ;
மினாபில் உள்ள பள்ளி மீதான தாக்குதல் ஒரு சாதாரண விபத்தோ அல்லது தவறான கணிப்போ அல்ல. அமெரிக்கா மற்றும் இஸ்ரேலிடம் மேம்பட்ட தொழில்நுட்பங்களும், மிகத் துல்லியமான இராணுவ மற்றும் தரவு அமைப்புகளும் இருப்பதாகக் கூறும்போது, இந்தப் பள்ளி மீதான தாக்குதல் வேண்டுமென்றே திட்டமிடப்பட்டது என்பதை மறுக்க முடியாது.
பள்ளியை மீது தாக்குதல் நடத்துவது போர்க்குற்றம் மற்றும் மனிதகுலத்திற்கு எதிரான குற்றமாகும். இக்குற்றத்தை அனைவரும் வெளிப்படையாகவும் நிபந்தனையின்றியும் கண்டிக்க வேண்டும், மேலும் இக்குற்றத்தைச் செய்தவர்கள் தெளிவாகவும் சந்தேகத்திற்கிடமின்றியும் பொறுப்பேற்க வேண்டும்.
இந்த தாக்குதலை நியாயப்படுத்தும் முயற்சியில் அமெரிக்கா வெளியிட்ட அறிக்கைகள், அதனைப் பொறுப்பிலிருந்து விடுவிக்காது என்று அவர் கூறினார்







