கோயில் நகைகளை உருக்கிய பணத்தை வங்கியில் செலுத்துவதன் மூலம், சம்மந்தப்பட்ட கோயில்களுக்கு கோடிக்கணக்கில் வருமானம் கிடைத்துவருவதாக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று இந்து சமய அறநிலையத்துறை மீதான மானியக்கோரிக்கை விவாதம் நடைபெற்றது. இதில் பேசிய பாஜக எம்எல்ஏ சரஸ்வதி, , கோயில்களில் பணிபுரிபவர்கள் அசைவம் சாப்பிடுகிறார்கள் என்றும், கோவில் நகைகளை உருக்குவதில் எவ்வளவு பணம் கிடைக்கிறது என்றும் கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்து பேசிய இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, கோயில்களில் பணிபுரியும் அலுவலர்களுக்கு அசைவ உணவுகள் பரிமாறப்படுவது இல்லை என்றார்.
அசைவம் சாப்பிடும் பழக்கம் இருந்தால் அதற்கு தடை விதிப்பதற்கு தமிழ்நாடு அரசு கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கும் என்றும், அறங்காவலர்கள் இருக்கும் கோயில்களில் தங்கங்களை உருக்கலாம் என்று நீதிமன்றமே தெரிவித்துள்ளதாகவும், அதன் அடிப்படையில் மூன்று மண்டலங்களாக பிரித்து, நீதிபதிகள் நியமிக்கப்பட்டு, அவர்கள் முன்னிலையில் நகைகளை உருக்கும் பணி நடைபெற்று வருவதாக தெரிவித்தார்.
முதற்கட்டமாக திருச்சங்குடியில் உள்ள கோயில் நகைகள் 27.6 கிலோ அளவுக்கு, மத்திய அரசுக்கு சொந்தமான மும்பையில் உள்ள தங்க உருக்காலைக்கு அனுப்பபட்டதாக கூறினார். அதன் மூலம் பெறப்பட்ட பணம் SBI வங்கியில் வரவு வைக்கப்பட்டதாவும், இதன் மூலம் கோடிக்கான வருமானம் கிடைப்பதாகவும், இந்த பணத்தில் கோயில் புனரமைப்பு பணிகளை மேற்கொள்ளலாம் என்றும் அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார்.







