எம்.ஜி.எம்-க்கு சொந்தமான இடங்களில் நடைபெறும் இரண்டாவது நாள் சோதனையில், வரி ஏய்ப்பு செய்ததற்கான ஆவணங்கள் கிடைக்கும் பட்சத்தில் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என வருமான வரித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
எம்.ஜி.எம் குழுமம் தமிழ்நாடு மட்டுமல்லாது பெங்களூரு உள்ளிட்ட பிற மாநிலங்களிலும் ஏற்றுமதி இறக்குமதி, மதுபான தயாரிப்பு, மருத்துவமனைகள்,நட்சத்திர விடுதிகள், வெளிநாட்டு வர்த்தகம் உள்ளிட்ட பல்வேறு தொழில்களில் ஈடுபட்டு வருகிறது.
எம்.ஜி.எம் குழுமம் முதன் முதலில் 1963-ஆம் ஆண்டு எம்.ஜி முத்து என்பவரால் துவங்கப்பட்டு ஏற்றுமதி இறக்குமதி தொழிலில் கால்பதித்து, பின்னர் படிப்படியாக பல்வேறு தொழில்களில் ஈடுபட்டு தற்போது தமிழ்நாடு மட்டுமல்லாது பல்வேறு மாநிலங்களிலும் பல்வேறு நிறுவனங்களைத் தொடங்கி இயங்கி வருகிறது. மேலும், இக்குழுமத்தின் பெயரில் சென்னையில் அம்யூஸ்மெண்ட் பூங்கா ஒன்றும் இயங்கி வருகிறது. இதன் மூலம் இந்திய அளவில் முன்னணி நிறுவனங்களுள் ஒன்றாக எம்.ஜி.எம் குழுமம் திகழ்ந்து வருகிறது.
https://twitter.com/news7tamil/status/1537290934026903552
இந்நிலையில் நேற்று காலை முதல் தமிழ்நாடு, பெங்களூரு உட்பட எம்ஜிஎம் குழுமத்துக்குச் சொந்தமான 40 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை மேற்கொண்டு வந்தனர். குறிப்பாகத் தமிழ்நாட்டில் சென்னை, நெல்லை, செங்கல்பட்டு மாவட்டம் மூட்டுக்காடு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் வருமான வரித்துறை சோதனை மேற்கொண்டனர். வரி ஏய்ப்புப் புகாரின் அடிப்படையில் இச்சோதனைகள் நடைபெறுவதாக வருமான வரித்துறை அதிகாரிகள் சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், எம்.ஜி.எம்க்கு சொந்தமான 40 இடங்களில், குறிப்பாக விழுப்புரம், சென்னை மயிலாப்பூர், சாந்தோம், ராதாகிருஷ்ணன் சாலை உள்ளிட்ட இடங்களில் சோதனை தொடர்கிறது. 300-க்கும் மேற்பட்ட அதிகாரிகள் இந்த சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். வரி ஏய்ப்பு செய்தற்கான ஆவணங்கள் கிடைக்கும் பட்சத்தில் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என வருமான வரித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.








