கனடாவில் பேஸ்புக், ஸ்னாப் போன்ற செயலிகள் மாணவர்களுக்கு தீங்கு விளைவிப்பதாக கூறி, அந்நிறுவனங்களிடம் $4 பில்லியன் இழப்பீடு கோரி 4 பள்ளிக் கூடங்கள் வழக்கு தொடர்ந்துள்ளன.
தற்போதைய காலகட்டத்தில் இளைஞர்கள் மற்றும் குழந்தைகள் வங்கியில் கணக்கு வைத்திருக்கிறார்களோ இல்லையோ சமூக வலைதள பக்கமான இன்ஸ்டாவில் கணக்கு வைத்துள்ளனர். இவ்வாறு சமூக ஊடகங்களை பயன்படுத்தும் 18 வயதிற்கும் குறைவாக உள்ள பல குழந்தைகள் அதைப் பற்றிய முழு புரிதல் இல்லாமல் பல்வேறு சிக்கல்களில் மாட்டிக்கொள்கின்றனர்.
குழந்தைகளிடம் சமூக ஊடகங்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த பல்வேறு நாடுகளில் உள்ள அரசுகளும், சமூக நல அமைப்புகளும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் கனடாவில் உள்ள நான்கு பள்ளிக்கூடங்கள் மெட்டா மற்றும் ஸ்னாப் போன்ற சமூக வலைதள நிறுவனங்களின் மீது வழக்கு தொடர்ந்துள்ளது. மேலும் இந்நிறுவனங்களின் தயாரிப்புகள் மாணவர்களுக்கு தீங்கு விளைவிப்பதாக கூறி $4 பில்லியன் நஷ்ட ஈடும் கேட்டு வழக்கு தொடர்ந்துள்ளனர்.
சமூக வலைதள பக்கங்களான இன்ஸ்டாகிராம், பேஸ்புக், டிக்டாக் போன்ற செயலிகள் போதைப்பொருள் தளங்களாக இருப்பதாகவும் அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இந்த செயலிகளை அதிகம் பயன்படுத்துவதால் மாணவர்களின் கற்றல் திறனில் ஈடுபாடு குறைவாக இருப்பதாகவும், மாணவர்களுக்கு மன நெருக்கடிகள் ஏற்படுவதாகவும் பள்ளி நிர்வாகங்கள் தெரிவித்துள்ளன.
இதனால் மாணவர்களை படிக்க வைப்பதில் அதிக சிக்கல்கள் எழுவதாகவும், இதற்காக கூடுதல் நேரங்கள் செலவிடப்படுவதாகவும் ஆசிரியர்கள் தெரிவித்துள்ளனர். இந்த செயலிகள் மாணவர்களின் சிந்தனை, நடத்தை, கற்றல் போன்ற செயல்பாடுகளின் நடத்தை முறையை முற்றிலும் மாற்றியமைத்துள்ளது எனவும் தெரிவித்துள்ளனர்.
டொராண்டோ மாவட்ட பள்ளி வாரியம், பீல் மாவட்ட பள்ளி வாரியம், டொராண்டோ கத்தோலிக்க மாவட்ட பள்ளி வாரியம் மற்றும் ஒட்டாவா-கார்லேடன் மாவட்ட பள்ளி வாரியம் ஆகிய நான்கு பள்ளிகளும் நஷ்ட ஈடு கோரி வழக்கு தொடர்ந்துள்ளனர். கடந்த ஆண்டு அமெரிக்காவின் 33 மாகாணங்கள் மெட்டாவின் தயாரிப்புகள் குழந்தைகள் மற்றும் இளைஞர்களிடம் மனநல பிரச்னைகளை ஏற்படுத்துவதாக அந்நிறுவனத்தின் மீது வழக்கு தொடர்ந்து குறிப்பிடதக்கது.







