மருத்துவக் கல்லூரி பட்டமளிப்பு விழா – மேடையிலேயே கண் கலங்கிய முதலமைச்சர் ரங்கசாமி!

புதுச்சேரி அரசு மருத்துவக் கல்லூரி பட்டமளிப்பு விழாவின் போது, மேடையில் அமர்ந்திருந்த முதலமைச்சர் ரங்கசாமி மாணவியின் பேச்சைக் கேட்டு கண் கலங்கிய சம்பவம் அனைவரையும் நெகிழ்ச்சியடையச் செய்தது. புதுச்சேரி கதிர்காமத்தில் அமைந்துள்ளது இந்திராகாந்தி அரசு…

புதுச்சேரி அரசு மருத்துவக் கல்லூரி பட்டமளிப்பு விழாவின் போது, மேடையில் அமர்ந்திருந்த முதலமைச்சர் ரங்கசாமி மாணவியின் பேச்சைக் கேட்டு கண் கலங்கிய சம்பவம் அனைவரையும் நெகிழ்ச்சியடையச் செய்தது.

புதுச்சேரி கதிர்காமத்தில் அமைந்துள்ளது இந்திராகாந்தி அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை. கடந்த 2005-ம் ஆண்டு காங்கிரஸ் கட்சியின் சார்பில் முதலமைச்சராக ரங்கசாமி இருந்தபோது ரூ.850 கோடி மதிப்பீட்டில் இதற்கு அடிக்கல் நாட்டப்பட்டு, பின்னர் 2010-ல் இக்கல்லூரி கட்டி முடிக்கப்பட்டது. இதற்கிடையில் அரசியல் ரீதியாக பல்வேறு பிரச்சனைகள் எழுப்பப்பட்டு ரங்கசாமி முதலமைச்சர் பதவியில் இருந்து இறக்கப்பட்டிருந்தாலும், அப்போதைய காங்கிரஸ் தலைவராக இருந்த சோனியா காந்தியால் இக்கல்லூரி திறக்கப்பட்டது. அப்போது காங்கிரஸ் கட்சியின் முதலமைச்சராக வைத்திலிங்கம் இருந்தார்.

இதற்கு பிறகு முதலமைச்சர் ரங்கசாமி தனிக்கட்சி ஆரம்பித்து குறுகிய காலத்திலேயே அதாவது 2011-ல் மீண்டும் முதலமைச்சராக பொறுப்பேற்ற அந்த வருடத்தில் தான் இக்கல்லூரியின் மாணவர் சேர்க்கை தொடங்கியது. இருந்தும் கல்லூரிக்கான அங்கீகாரம் பெறுவதில் நிறைய சிக்கல்கள் ஏற்பட்ட போதிலும் தொடர் முயற்சியால் அவற்றையெல்லாம் சரி செய்து இந்திய மருத்துவக் கவுன்சிலின் நிரந்தர அங்கீகாரத்தை பெற்றுக்கொடுத்தார்.

இந்த நிலையில், நேற்றைய தினம் மருத்துவ கல்லூரியில் 2010 முதல் 2017 வரை படிப்பை முடித்தவர்களுக்கு பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இளங்கலை மற்றும் முதுகலை மருத்துவ பட்டம் பெற்ற 626 மருத்துவ மாணவர்களுக்கு முதலமைச்சர் ரங்கசாமி பட்டங்களை வழங்கி பாராட்டினார்.

அப்போது நிகழ்ச்சியில் வரவேற்று பேசிய கல்லூரி இயக்குனர் உதயசங்கர் முதலமைச்சர் ரங்கசாமியால்தான் இந்த மருத்துவக்கல்லூரி உருவாக்கப்பட்டது. பல காரணங்களால் கல்லூரியின் பட்டமளிப்பு விழா தடைபட்டுக்கொண்டே இருந்தது. கடைசியில் இந்த கல்லூரி உருவாக காரணமாக இருந்தவரின் கையால்தான் பட்டமளிப்பு விழா நடைபெற வேண்டும் என இறைவனின் ஆசி இருந்துள்ளது என்று தெரிவித்தார்.

இயக்குனர் உதயசங்கரை தொடர்ந்து மணிமொழி என்ற முதுநிலை மருத்துவ மாணவி பேசும்போது, நான் ஏழை குடும்பத்தில் பிறந்தவள். எங்கள் குடும்பத்தில் உள்ள 4 பேரில் 3 பேர் பெண்கள். 3 பேருமே அரசு மருத்துவ கல்லூரியில் படித்து மருத்துவராகி உள்ளோம். இதற்கு முதலமைச்சர் ரங்கசாமி தான் காரணம் என்று மனமுருக பேசினார். இவர்களின் அனைவரின் பேச்சையும் கேட்ட முதலமைச்சர் ரங்கசாமி, உணர்ச்சி வசப்பட்டு தன் கண்களில் இருந்து வழிந்த ஆனந்த கண்ணீரை துடைத்து கொண்டார்.

தன்னால் உருவாக்கப்பட்ட மருத்துவ கல்லூரியில் இலவசமாக ஏழை எளிய மாணவர்கள் மருத்துவம் படித்து மருத்துவர்கள் ஆக பணியாற்றுவதை எண்ணியும், அவர்களுக்கு தற்பொழுது தனது கையாலையே பட்டங்களை வழங்குவதை நினைத்தும் ஆனந்தத்தில் முதலமைச்சர் ரங்கசாமி மேடையிலேயே கண்ணீர் வடித்த சம்பவத்தை பார்த்து மேடையில் இருந்தவர்கள் நெகிழ்ச்சியடைந்தனர்.

  • பி. ஜேம்ஸ் லிசா
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.