தமிழக மக்கள் அனைவருக்கும் அதிமுக இடைக்கால பொதுச்செயலாளரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
இன்று நள்ளிரவு 12 மணிக்கு 2022ஆம் ஆண்டு நிறைவுபெற்று, 2023ஆம் ஆண்டு பிறக்கவுள்ளது. இந்த புத்தாண்டை வரவேற்கும் விதமாக உலகெங்கிலும் பல்வேறு ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. தமிழ்நாட்டிலும் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்நிலையில் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும், முக்கிய பிரமுகர்களும் மக்களுக்கு புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், முன்னாள் முதலமைச்சரும், அதிமுக இடைக்கால பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி, தமிழக மக்களுக்கு புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், “ மலருகின்ற புத்தாண்டை உற்சாகத்துடன் கொண்டாடும் அன்பிற்கினிய தமிழக மக்கள் அனைவருக்கும் எனது இதயம் கனிந்த புத்தாண்டு நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறேன்.
மறைந்த முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா ஆகியோரது ஆட்சிக் காலங்களிலும், தொடர்ந்து நடைபெற்ற அதிமுக ஆட்சியிலும், தமிழகத்தில் உள்ள அனைத்து மக்களும் அமைதியான சூழலில் வளமான வாழ்வு பெற்று, எவ்வித இன்னலுக்கும் ஆளாகாமல் சிறப்புடன் வாழ்ந்து வந்ததை இந்த நேரத்தில் பெருமையுடன் நினைவுகூர கடமைப்பட்டுள்ளேன்.
புலரும் புத்தாண்டு, அனைவருக்கும் ஒரு இனிய சிறந்த துவக்கமாக இருக்கட்டும்; இருளும் சோகமும் விலகி இருக்க, புதிய ஆண்டு பிரகாசமும், நம்பிக்கையும் நிறைந்ததாக இருக்கட்டும்; நிறைந்த வளம், நிறைந்த ஆரோக்கியம், மிகுந்த சந்தோஷம், வெற்றி இவற்றையெல்லாம் இந்த இனிய புத்தாண்டு மக்களுக்கு வழங்கட்டும் என, எல்லாம் வல்ல இறைவனை மனதார பிரார்த்தித்து, எம்.ஜி.ஆர். மற்றும் ஜெயலலிதா ஆகியோரது தூய வழியில், அன்பிற்கினிய தமிழக மக்கள் அனைவருக்கும் எனது உளங்கனிந்த புத்தாண்டு நல்வாழ்த்துகளை மீண்டும் ஒருமுறை உரித்தாக்கிக் கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.