ஒடிசா ரயில் விபத்து போலவே, நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பாக நிறைய ரயில் விபத்துகள் நடக்க வாய்ப்பிருப்பதாக பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா தெரிவித்துள்ளார்.
மதுரை திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் பாஜக மூத்த தலைவர் ஹெச். ராஜா இன்று காலை சாமி தரிசனம் செய்தார். அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது பேசியதாவது:
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
தமிழகத்தில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில் நிலங்களை எந்த ஒரு பொது காரியத்திற்காகவும் விற்பனை செய்யக்கூடாது என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆனால், திமுக அரசு கோயில் நிலங்களை விற்க திட்டமிட்டு வருகிறது. கோயில் நிலங்களை விற்பதற்கு யாருக்கும் உரிமை இல்லை. நீதிமன்ற உத்தரவை மீறி விற்பனை செய்தால் பாஜக சார்பில் மிகப்பெரிய போராட்டம் நடத்தப்படும். தற்போது இந்து சமய அறநிலையத்துறை அமைச்சராக உள்ள சேகர்பாபு தனது அமைச்சர் பதவியை தொடர கூடாது. அவருக்கு பதிலாக கே.என்.நேருவை அறநிலைய துறை அமைச்சராக நியமிக்கலாம். அவர் நல்ல வைஷ்ணவர். அவர் கடவுளுக்கு துரோகம் செய்ய மாட்டார்.
மாநில கல்வி தரத்தில் குறைபாடு உள்ளது. எனவே அது தொடர்பாக ஆளுநர் பேசியதில் தவறில்லை. முதலமைச்சர் ஸ்டாலின் முதலீடுகளை ஈர்ப்பதற்காக வெளிநாடு பயணம் செல்லவில்லை.
ஒடிசா ரயில் விபத்துக்கு பொறுப்பேற்று பிரதமரை பதவி விலக சொல்பவர்கள் ஏன் கள்ளச்சாராய விவகாரத்தில் ஸ்டாலினை பதவி விலக சொல்லவில்லை? தமிழக டாஸ்மாக்கிலேயே கள்ளச்சாராயம் விற்கின்றனர். அனிதா உயிரிழந்த போது நீட் தேர்வுக்கு தடை விதிக்க சொன்ன ஸ்டாலின், தந்தை குடிப்பழக்கத்தை நிறுத்த வலியுறுத்தி ஒரு சிறுமி தற்கொலை செய்து கொண்ட பின்னர் மொத்த டாஸ்மாக்கையும் மனிதாபிமான அடிப்படையில் மூடியிருக்க வேண்டாமா?
ஒடிசா ரயில் விபத்தின் பின்னணியில் சதிவேலை நடந்திருப்பதாக கூறப்படுகிறது. வாலாடியில் கூட ரயிலை கவிழ்க்க முயற்சி நடந்துள்ளது. நாடாளுமன்ற தேர்தலை முன்வைத்து, அதற்கு முன்னதாக நக்சலைட்கள் இன்னும் நிறைய சதிவேலைகளை செய்து இந்த ரயில் விபத்து போலவே இன்னும் பல விபத்துகளை ஏற்படுத்த வாய்ப்பிருப்பதாக ஹெச்.ராஜா கூறினார்.
- பி.ஜேம்ஸ் லிசா