டெல்லி முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவை மேலும் 2 நாள்கள் சிபிஐ காவலில் வைத்து விசாரிக்க சிபிஐ சிறப்பு நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
டெல்லியில், புதிய மதுபான கொள்கை முறைகேடுகள் தொடர்பான விசாரணையை சிபிஐ விசாரித்து வருகிறது. இதுதொடர்பாக டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவை கடந்த ஞாயிற்றுக்கிழமை சிபிஐ கைது செய்தது.
இதைத்தொடர்ந்து, மணீஷ் சிசோடியா திங்கள்கிழமை டெல்லி சிபிஐ போஸ் அவென்யூ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். மணீஷ் சிசோடியாவிடம் கூடுதல் விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று சிபிஐ கோரியது. இந்நிலையில், அதை ஏற்றுக்கொண்டு மணீஷ் சிசோடியாவை 5 நாட்கள் மார்ச் 4ஆம் தேதி வரை சிபிஐ காவலில் வைத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
மணீஷ் சிசோடியாவுக்கு பிறப்பித்த சிபிஐ காவல் இன்றுடன் முடிவடையும் நிலையில், மேலும் விசாரணை நடத்த வேண்டியிருப்பதால் மேலும் 3 நாள்கள் காவலை நீட்டிக்க சிபிஐ தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதனை விசாரித்த நீதிமன்றம், மேலும் 2 நாள்கள் காவலை நீட்டித்து உத்தரவிட்டுள்ளது.
-ம.பவித்ரா








