மத்தியப் பிரதேச மாநிலம் அனுப்பூர் மாவட்டத்தில் உள்ள கோட்மா பேருந்து நிலையம் அருகே 4 மாடி விடுதி கட்டிடம் அமைந்துள்ளது. இந்த நிலையில் நேற்று மாலை விடுதி கட்டிடம் திடீரென இடிந்து விழுந்து விபத்திற்குள்ளானது.
இது குறித்துத் தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மீட்புப் படையினர் இரவு முதல் விடிய விடிய மீட்புப் பணியில் ஈடுபட்டனர். இந்த விபத்தில் இதுவரை உயிரிழந்தவர்களில் ஹனுமான் தீன் யாதவ் (55) மற்றும் ராம்கிரிபால் யாதவ் (50) என இருவர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
மேலும் இடிபாடுகளுக்குள் இன்னும் 10 முதல் 12 பேர் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது. சுமார் 10 ஆண்டுகள் பழமையான கட்டிடத்திற்கு அருகிலுள்ள நிலத்தில் புதிய கட்டிடம் கட்டுவதற்காகப் பள்ளம் தோண்டப்பட்டதே இந்த விபத்திற்குக் காரணம் என்று முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. சாலையின் மறுபுறம் இருந்த ஒரு கட்டிடத்தில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் இந்த விபத்து காட்சிகள் பதிவாகியிருந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.







