மணிப்பூர் நிலச்சரிவில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 37 ஆக உயர்ந்துள்ளது. தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் மீட்பு பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளது.
மணிப்பூர் மாநிலத்தில் பெய்த கனமழை காரணமாக நோவனி மாவட்டத்தில் உள்ள துபுல் ரயில் நிலையம் அருகே நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் ஏராளமானோர் சிக்கி தவித்தனர். இதையடுத்து தேசிய பேரிடர் மீட்பு பிரிவினர் மற்றும் ராணுவத்தினர் நிலச்சரிவில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
இந்த நிலசரிவில் சுமார் 60க்கும் மேற்பட்டோர் சிக்கியிருப்பதாக அதிகாரிகள் தெரிவித்த நிலையில் இதுவரை 23 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர். அவர்களை மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், தொடர்ந்து 4-வது நாளாக மீட்புப் பணி நடைபெற்று வருகிறது. இதுவரை 37 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. அவர்களில் 24 பேர் ராணுவ வீரர்கள் ஆவர். மேலும் மாயமான 25 பேரை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருவதாக மீட்பு பணியில் ஈடுபட்டுள்ள ராணுவத்தினர் தெரிவித்தனர்.
அப்பகுதியில் மீண்டும் கனமழை மற்றும் நிலச்சரிவு ஏற்பட்டதால் மீட்பு பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளது. நிலச்சரிவில் சிக்கிய 13 ராணுவ வீரர்கள் மற்றும் பொதுமக்கள் 5 பேர் இதுவரை பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர்.








