ஆப்கானிஸ்தானில் தேசிய கொடியை காரின் கண்ணாடிக்கு அருகில் வைத்து சென்றவரை தலிபான்கள் கையை கட்டி கைது செய்யும் வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
ஆப்கானிஸ்தானில் அமெரிக்க ராணுவம் வெளியேறத் தொடங்கியதை அடுத்து, தலிபான்கள் ஆட்சியை கைப்பற்றியுள்ளனர். காபூலை, தாலிபான்கள் கைப்பற்றியதும், அதிபர் அஷ்ரப் கனி நாட்டைவிட்டுத் தப்பினார். அவர் ஐக்கிய அரபு அமீரகத்தில் தஞ்சமடைந்துள்ளார்.
ஆப்கானிஸ்தானை கைப்பற்றியுள்ள தலிபான்கள், இஸ்லாமிய அமீரக ஆப்கானிஸ்தான் எனப் பெயர் மாற்றம் செய்துள்ளனர். இந்நிலையில் தலிபான்களால் தங்களுக்கு ஆபத்து ஏற்படும் என அஞ்சும் ஆயிரக்கணக்கான ஆப்கானிஸ்தானியர்கள், நாட்டை விட்டு வெளியேறி வருகின்றனர். விமானத்தின் இறக்கைகளிலும், சக்கரங்களிலும் தொற்றிக் கொண்டு பலர் தப்ப முயன்ற காட்சிகள் வெளியாகி பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
இந்நிலையில், தலிபான்களுக்கு எதிராக பல்வேறு பகுதிகளில், அந்நாட்டின் சுதந்தர தினத்தை முன்னிட்டு நேற்று (ஆகஸ்ட் 9) தேசிய கொடி ஏந்தி ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. அப்போது போராட்டக்காரர்கள் தேசிய கொடியை ஏந்தி சென்றனர்.
இந்நிலையில் கார் கண்ணாடிக்கு கீழே அந்நாட்டின் தேசிய கொடியை வைத்தபடி ஒருவர் காரை ஓட்டி வந்தார். அவரை வழிமறித்த தலிபான்கள், காரில் இருந்து வெளியேற்றி கையை கட்டி, கைது செய்தனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
அதே போல மற்றொரு பகுதியில் தேசிய கொடியுடன் சென்ற இளைஞர் ஒருவரை ஆயுத மேந்திய தலிபான்கள், துப்பாக்கியால் தாக்கியுள்ளனர். இந்த அதிர்ச்சி வீடியோவும் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகின்றனர்.









