பிற்படுத்தப்பட்டோர் பட்டியலை மாநிலங்களே தயாரிக்க அதிகாரம் அளிக்கும் சட்டதிருத்த மசோதாவுக்கு குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்துள்ளார்.
மகாராஷ்டிர மாநிலத்தில் மராத்தா பிரிவினருக்கு கல்வி, வேலைவாய்ப்பில் 16 சதவிகித இடஒதுக்கீடு வழங்கி 2018-ம் ஆண்டு அம்மாநில அரசு சட்டம் நிறைவேற்றியது. இந்தச் சட்டத்துக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு விசாரணையில், மாநில அரசுகளுக்கு ஓபிசி பட்டியலை மாற்றியமைக்க உரிமை இல்லை என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. மாநில அரசுகளுக்கு உரிமை இருப்பதாக மத்திய அரசு தனது வாதத்தை எடுத்து வைத்த போதும், மராத்தா பிரிவினருக்கு மகாராஷ்டிரா அரசு வழங்கிய இட ஒதுக்கீட்டை உச்ச நீதிமன்றம் ரத்து செய்தது.
இந்நிலையில், இட ஒதுக்கீட்டை மாநில அரசுகளே தயாரிப்பதற்கான அதிகாரம் வழங்கும் சட்டதிருத்த மசோதா நடந்து முடிந்த நாடாளுமன்ற கூட்டத்தொடரில் மக்களவை, மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டன. இதையடுத்து குடியரசு தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டது. இந்நிலையில், இந்த மசோதாவிற்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்துள்ளார்.







