ரூ.2,63,976க்கான காசோலை அட்டையுடன் தன் குடும்பத்தின் மீதுள்ள கடனை திருப்பி செலுத்துவதாகக் கூறி நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்த நபரால் பரபரப்பு ஏற்பட்டது.
தமிழ்நாடு நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் நேற்று அரசின் நிதிநிலை குறித்த வெள்ளை அறிக்கையை வெளியிட்டார். இதில் தமிழக அரசுக்கு ரூ. ஐந்து லட்சம் கோடிக்கும் மேல் கடன் உள்ளதாகவும், ஒவ்வொரு குடும்பத்தின் மீதும் 2 லட்சத்து 63 ஆயிரத்து 976 கடன் சுமை இருப்பதாகவும் குறிப்பிட்டிருந்தார்.
இதனைத் தொடர்ந்து நாமக்கல் அருகே மேற்கு பாலப்பட்டியைச் சேர்ந்த ரமேஷ் தியாகராஜன் என்பவர் ரூ.2,63,976க்கான காசோலை அடங்கிய அட்டையை தயார் செய்து நாமக்கல் கோட்டாட்சியர் அலுவலகத்திற்கு வந்திருந்தார். கோட்டாட்சியர் மு.கோட்டை குமார், அந்த இளைஞர் வழங்கிய காசோலை அட்டையை வாங்க மறுத்துவிட்டார்.
நாமக்கல் மாவட்ட ஆட்சியரை நேரில் சந்தித்து வழங்குமாறு கோட்டாட்சியர் தெரிவித்து விட்டார். இதனைத் தொடர்ந்து ஆட்சியர் அலுவலகம் சென்றார் ரமேஷ். ஆனால் மாவட்ட ஆட்சியரும் ரமேஷ் தியாகராஜன் வழங்கிய காசோலை அட்டையை மறுத்து விட்டார்.







