மக்கள் நீதி மய்யம் கட்சி மாநாடு ஒத்திவைப்பு

மக்கள் நீதி மய்யம் கட்சியின் மாநாடு வரும் 21ஆம் தேதி நடைபெறவிருந்த நிலையில், அது ஒத்திவைக்கப்படுவதாக அக்கட்சி தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக, கட்சியின் தலைவர் கமல்ஹாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘சீரமைப்போம் தமிழகத்தை’ என்ற…

மக்கள் நீதி மய்யம் கட்சியின் மாநாடு வரும் 21ஆம் தேதி நடைபெறவிருந்த நிலையில், அது ஒத்திவைக்கப்படுவதாக அக்கட்சி தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக, கட்சியின் தலைவர் கமல்ஹாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘சீரமைப்போம் தமிழகத்தை’ என்ற பெயரில் கட்சியின் மாநில மாநாட்டை பிப்ரவரி 21ஆம் தேதி நடத்த திட்டமிட்டிருந்ததாக குறிப்பிட்டுள்ளார்.

அதற்கு அனுமதி கேட்டு கடந்த 6ஆம் தேதியே காவல்துறையை அணுகியதாகவும், காவல்துறை அனுமதி தாமதிக்கப்படுவதால் வேறு வழியின்றி மாநாட்டை மார்ச் 7ஆம் தேதிக்கு ஒத்திவைப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

வண்டலூர்-ஒரகடம் சாலையில் உள்ள மண்ணிவாக்கத்தில் பிரம்மாண்டமாக மாநாடு நடைபெறும் என்றும் அவர் கூறியுள்ளார். மேலும், பிப்ரவரி 21ஆம் தேதி மக்கள் நீதி மய்யத்தின் 4ஆம் ஆண்டு தொடக்க விழா, சென்னை மேற்கு தாம்பரத்தில் உள்ள தனியார் கல்லூரி வளாகத்தில் நடைபெறும் என தெரிவித்துள்ள கமல்ஹாசன், மார்ச் 8ஆம் தேதி மகளிர் தினத்தன்று ‘பெண் சக்தி’ எனும் தலைப்பில் பெண்மையை போற்றும் நிகழ்வு, காட்டாங்குளத்தூரில் நடைபெறும் என்றும் கூறியுள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Leave a Reply