நீட் தேர்வு வேண்டாம் என்பதே பெரும்பான்மையோரின் கருத்தாக இருப்பதாக, நீட் பாதிப்பு குறித்து ஆய்வு செய்ய அமைக்கப்பட்ட குழுவின் தலைவர், ஓய்வு பெற்ற நீதிபதி ஏ.கே.ராஜன் தெரிவித்தார்.
நீட் தேர்வின் தாக்கம் குறித்து ஆராய ஜூன் 10-ம் தேதி, ஓய்வுபெற்ற நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையில் குழு ஒன்று அமைக்கப்பட்டது. இந்த குழு கூடி நீட் தேர்வின் பாதிப்புகள் குறித்து ஆய்வு செய்தது. கடந்த ஒரு மாத காலமாக பல்வேறு தரப்பிடமிருந்தும் நீட் தேர்வு குறித்த கருத்துகளை பெற்றது இந்தக் குழு.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இதுவரை நீட் தேர்வுக்கு ஆதரவாகவும், எதிராகவும் 86,342 பேர், இந்தக் குழுவிடம் கருத்து தெரிவித்திருந்தனர். இந்நிலையில், இறுதி அறிக்கையை, குழுவின் தலைவர் ஏ.கே.ராஜன், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் இன்று வழங்கினார்.
இதன் பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், புள்ளி விவரங்களின் அடிப்படையிலேயே அறிக்கை தயார் செய்யப்பட்டுள்ளதாகவும் பெரும்பாலானோர் நீட் தேர்வு வேண்டாம் என கூறியுள்ளதாகவும் தெரிவித்தார். தங்களுக்கு வழங்கப்பட்ட கால அவகாசம் போதுமானது என்றும் தங்கள் குழுவின் பணிக்காலம் முடிவடைந்தது என்றும் தெரிவித்த அவர், 165 பக்க அறிக்கையை முதலமைச்சரிடம் வழங்கியுள்ளதாகக் கூறினார்.
அடுத்தக் கட்ட நடவடிக்கையை முதலமைச்சர் மேற்கொள்வார் எனவும் அவர் செய்தியாளர் களிடம் தெரிவித்தார்.