9 ஆண்டு பாஜக ஆட்சியில் எந்த ஒரு சிறப்பு திட்டமும் தமிழ்நாட்டுக்கு வரவில்லை என்று நான் கேட்ட எந்த கேள்விக்கும் அமித்ஷா பதில் தரவில்லை என்று குற்றம் சாட்டிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், காங்கிரஸ் – திமுக கூட்டணி மத்தியில் ஆட்சியில் இருந்த போது தமிழ்நாட்டிற்கு கிடைத்த முக்கிய திட்டங்கள் என்ன என்பதை பட்டியலிட்டார்.
சேலம் மாவட்டம் மேட்டூர் அணையிலிருந்து, காவிரி டெல்டா பாசனத்திற்கு ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் 12-ந்தேதி தண்ணீர் திறக்கப்படுவது வழக்கம். மேலும் அணைக்கு வரும் நீரின் வரத்து மற்றும் அணையின் நீர் இருப்பை பொறுத்து ஜூன் 12-ந்தேதிக்கு முன்னதாகவோ அல்லது தாமதமாகவோ தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
அந்த வகையில், இந்த ஆண்டு 331 நாட்களுக்கும் மேலாக மேட்டூர் அணையின் நீர்மட்டம் 100 அடிக்கும் மேலாக நீடித்து வந்ததால், ஜூன் மாதம் 12-ந் தேதியே, தண்ணீரை திறந்துவிட தமிழக அரசு முடிவு செய்தது. அதன்படி இன்று காவேரி டெல்டா குறுவை சாகுபடி பாசனத்திற்காக மேட்டூர் அணையிலிருந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தண்ணீரை திறந்து வைத்தார்.
இதனையடுத்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், நேற்று வேலூர் மாவட்டம் கந்தனேரியில் பாஜகவின் 9 ஆண்டு கால சாதனை விளக்க பொதுக்கூட்டத்தில் மத்திய அமைச்சர் அமித்ஷா பேசியது தொடர்பாக எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்தார்.
அப்போது சேலத்தில் எனது தலைமையில் நடந்த திமுக செயற்குழு கூட்டத்தில், நான் தெளிவாக பேசி இருக்கிறேன். இந்த 9 வருட பாஜக ஆட்சியில் எந்த ஒரு சிறப்பு திட்டமும் தமிழ்நாட்டுக்கு வரவில்லை. ஆனால் நாங்கள் இதற்கு முன்பாக காங்கிரஸ் உடன் கூட்டணியில் இருந்த போது, என்னென்ன திட்டங்களை எல்லாம் தமிழ்நாட்டுக்கு கொண்டு வந்திருக்கிறோம் என்பதை பட்டியல் போட்டு நான் காண்பித்து இருக்கிறேன். அதை அமித்ஷா படிக்கவில்லையா? அல்லது அதனை தெளிவாக படித்து யாரும் அவரிடம் எடுத்து சொல்லவில்லையா? என்பது எனக்கு சந்தேகமாக உள்ளது என கூறினார்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பட்டியலிட்ட, காங்கிரஸ் – திமுக கூட்டணி ஆட்சியில் தமிழ்நாட்டிற்கு கிடைத்த முக்கிய திட்டங்கள் குறித்து பேசினார்.
காங். – திமுக கூட்டணி ஆட்சியில் தமிழ்நாட்டிற்கு கிடைத்த முக்கிய திட்டங்கள்:
✦ சென்னை மெட்ரோ ரயில்
✦ தமிழுக்கு செம்மொழி அந்தஸ்து
✦ தமிழ் செம்மொழி உயராய்வு நிறுவனம்
✦ சேது சமுத்திரத்திட்டம்
✦ ஒரகடத்தில் தேசிய மோட்டார் வாகன சோதனை ஆராய்ச்சி மையம்
✦ தாம்பரம் தேசிய சித்த மருத்துவ ஆய்வு மையம்
✦ சேலம் புதிய ரயில்வே கோட்டம்
✦ சென்னை துறைமுகம் – மதுரவாயல் பறக்கும் சாலை
✦ நெம்மேலியில் கடல்நீரை குடிநீராக்கும் திட்டம்
✦ ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டம்
✦ சென்னைக்கு அருகில் கடல்சார் தேசிய பல்கலைக்கழகம்
✦ திருவாரூர் மத்திய பல்கலைக்கழகம்
✦ கரூர், ஈரோடு, சேலம் ஆகிய மாவட்டங்களில் ரூ.400 கோடியில் உயர் தொழில்நுட்ப ஜவுளி பூங்கா
இவைகள் எல்லாம் காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் தான் வந்தது. இதேபோல தான் தமிழ்நாட்டிற்கு என்ன சிறப்பு திட்டங்களை கொண்டு வந்தீர்கள் என்பது தான் என்னுடைய கேள்வி. ஆனால் இதற்கெல்லாம் அமித்ஷா பதிலளிக்காமல் நிதி ஒதுக்கீடு பற்றி பேசிவிட்டு சென்றிருக்கிறார் என முதலமைச்சர் ஸ்டாலின் குற்றம் சாட்டினார்.
- பி.ஜேம்ஸ் லிசா