மதுரையில் வைகை ஆற்றில் கலக்கப்படும் கழிவுகளால், அப் பகுதியில் தண்ணீரின் நிறம் மாறி வருகிறது. மேலும் துர்நாற்றமும் வீசுவதால் மக்கள் கவலை அடைந்துள்ளனர்.
அண்மை காலமாக தமிழ்நாட்டின் கத்தின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் அவ்வப்போது மழை பெய்து வருவதால், வைகை ஆற்றில் நீர்வரத்து தொடர்ந்து இருந்து வருகிறது. அதே நேரம், மதுரையில் வைகை ஆற்றில் கழிவுநீர் கலப்பதாலும், குப்பைகள் கொட்டப்படுவதாலும் சுகாதாரக்கேடு ஏற்பட்டுள்ளது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
ஆற்றில் கழிவு நீர் கலப்பதை தடுக்க மதுரையில் செல்லூர் பந்தல்குடி கால்வாயில் ரூ.2.50 கோடியில் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்பட்டது. ஆனால், இந்த சுத்திகரிப்பு நிலையத்தில் குறைந்த அளவிலேயே கழிவுநீர் சத்திகரிக்கப்படுவதால், ஆற்றில் கழிவுநீர் கலப்பதைத் தடுக்க முடியவில்லை.
மேலும் வைகை ஆற்றில் கழிவுநீர் மற்றும் குப்பைகள் கலப்பதை தடுப்பதற்காக ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் இரண்டு புறங்களிலும் உயரமான தடுப்பு சுவர்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஆனால் இதனை மீறியும் மதுரை மாநகரின் பல்வேறு பகுதிகளிலும் வைகை ஆற்றில் கழிவுநீர் கலந்து வருகிறது.
மதுரை தத்தனேரி ஈஎஸ்ஐ சாலை பின்புறம் உள்ள வைகை ஆற்றில் முழுவதுமாக கழிவுநீர் மற்றும் ரசாயன கழிவுகள் திறந்து விடப்படுகின்றன. இதனால் அந்த பகுதியில் நீரின் நிறம் மாறி துர்நாற்றம் வீசக் கூடிய நிலை காணப்படுகிறது.
அந்த பகுதியில் ஏராளமான குடியிருப்புகள், உணவகங்கள், மருத்துவமனைகள் உள்ள நிலையில் கழிவு நீரானது எங்கிருந்து கொண்டு வரப்படுகிறது? என்பது தெரியாத அளவிற்கு குழாய் மூலம் கழிவு நீர் திறந்து விடப்பட்டு வருகிறது.
இதே போன்று அண்ணாநகர், தெப்பக்குளம் அதனை ஒட்டியுள்ள பகுதிகளிலும் பல்வேறு கட்டடங்களில் இருந்து கழிவுநீர் வைகை ஆற்றில் கலக்கப்பட்டு வருகிறது. இதனை தடுக்கவும், ஆற்றின் கரையோரங்களை தினமும் கண்காணிக்கவும், மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என பல்வேறு தரப்பினரும் கோரிக்கை வைத்து வருகின்றனர்.
- பி. ஜேம்ஸ் லிசா