மதுரை மாநகர் மாவட்ட தலைவராக, புறநகர் மாவட்ட தலைவர் மகா சுசீந்திரனுக்குக் கூடுதல் பொறுப்பு வழங்கி பாஜக மாநில தலைவர் அண்ணாமலை உத்தரவிட்டுள்ளார்.
மதுரை மாவட்டம் புதுப்பட்டியைச் சேர்ந்த இராணுவ வீரர் லட்சுமணன் உடலுக்கு அஞ்சலி செலுத்தும் போது திமுக – பாஜகவுக்கு இடையே மோதல் ஏற்பட்டது. இதனையடுத்து மதுரை விமான நிலையத்தில் தமிழ்நாடு நிதியமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் கார் மீது பாஜகவினர் செருப்பு வீசினர். இச்சம்பவம் தமிழ்நாட்டு அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியது.
அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த டாக்டர் சரவணன், ஓராண்டு முன் பாஜகவில் சேர்ந்தேன், பாஜக சிறுபான்மை மக்களுக்கு எதிராகவே செயல்பட்டு வந்தனர், அதையும் பொறுத்துக் கொண்டு நான் பாஜகவில் பயணித்தேன். இது ஒரு புறமிருக்க அமைச்சர் கார் மீதான தாக்குதல் எனக்கு மன உளைச்சலை உண்டாக்கியது. எனக்குத் தூக்கம் வராத காரணத்தால் நள்ளிரவு நிதியமைச்சரைச் சந்தித்தேன். அவரிடம் மதுரை விமானநிலையத்தில் நடைபெற்ற விரும்பத் தகாத காரணத்திற்காக மன்னிப்புகோரினேன்.
https://twitter.com/BJP4TamilNadu/status/1559179035657539584
அண்மைச் செய்தி: ‘பாஜக மாநில துணைத் தலைவர் கே.பி.ராமலிங்கத்துக்கு 29ம் தேதி வரை நீதிமன்ற காவல்!’
பாஜக தொண்டர்கள் கட்டுப்பாட்டை மீறி நடந்து கொண்டது வருத்தம் அளிக்கிறது. நிதியமைச்சர் இந்நிகழ்வைப் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. இது போன்ற துவேசமான அரசியலைச் செய்ய நான் ஒரு ஆளாக இருக்கக் கூடாது என நினைத்தேன். அமைச்சரைச் சந்தித்து மன்னிப்பு கேட்டதால் மனது இலகுவாக மாறி உள்ளது. நான் தனிப்பட்ட முறையில் அமைச்சரைச் சந்தித்தேன், பாஜகவின் பதவியை விட மன அமைதி மிக முக்கியமானது. பாஜகவில் உறுதியாக நான் தொடர மாட்டேன். பாஜகவின் மத, வெறுப்பு அரசியல் எனக்குப் பிடிக்கவில்லை எனக் கூறினார்.
அதனைத்தொடர்ந்து மதுரை நகர் மாவட்ட தலைவர் டாக்டர் சரவணன் கட்சியின் கட்டுப்பாட்டை மீறியும், கட்சிக்குக் களங்கம் விளைவிக்கும் செயல்களில் ஈடுபட்டு வருவதாலும், கட்சியின் அடிப்படை உறுப்பினரிலிருந்து நிரந்தரமாக நீக்கப்படுவதாக அறிவித்த பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, கட்சியின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் அவரிடம் கட்சி சார்பாக எவ்வித தொடர்பும் வைத்துக்கொள்ள வேண்டாம் எனத் தெரிவித்தார். இந்நிலையில், மதுரை மாநகர் மாவட்ட தலைவராக, புறநகர் மாவட்ட தலைவர் மகா சுசீந்திரனுக்குக் கூடுதல் பொறுப்பு வழங்கி பாஜக மாநில தலைவர் அண்ணாமலை உத்தரவிட்டுள்ளார்.








