மதுரை தெற்குவாசல் முகைதீன் ஆண்டவர் தர்ஹா சந்தனக்கூடு விழா வெகுவிமரிசையாக நடைபெற்றதையடுத்து ஏராளமான பொதுமக்கள் பங்கேற்றனர்.
மதுரை தெற்குவாசல் பகுதியில் அமைந்துள்ள பழமை வாய்ந்த முகைதீன் ஆண்டவர்
தர்ஹாவில் சந்தனக்கூடு விழாவானது கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதனையடுத்து நாள்தோறும் இரவில் மௌலுது ஓதப்பட்டது. இதனை தொடர்ந்து விழாவின் முக்கிய நிகழ்வாக சந்தனக்கூடு விழா வெகு விமர்சையாக நடைபெற்றது.
இதற்காக மின் விளக்குகளால் கப்பல் போன்று அலங்கரிக்கப்பட்ட சந்தனக்கூடு ரதமானது ஊர்வலமாக சிலம்பாட்டம், மேளதாள வாத்தியங்கள் முழங்க, ஒட்டகம், யானை, குதிரையுடன் வான வேடிக்கையுடன் தெற்குமாரட் வீதி, காஜிமார்தெரு, நேதாஜி ரோடு, சிம்மக்கல், நெல்பேட்டை வழியாக கொண்டு செல்லப்பட்டது. செல்லும் வழிநெடுகிலும் இஸ்லாமியர் சந்தனக்கூட்டை தொட்டு வணங்கினர்.
இதனையடுத்து ஊர்வலம் நிறைவடைந்த நிலையில் அதிகாலையில் தர்ஹாவில் அமைந்துள்ள ரவ்லா ஷரீபில் சந்தனம் பூசுதல் நடைபெற்றது. இதனையடுத்து தர்ஹாவிற்கு வந்தவர்களுக்கு சந்தனம் வழங்கப்பட்டது. இந்த விழாவில் இஸ்லாமியர்கள் மட்டுமின்றி அனைத்து மதத்தினரும் மத வேறுபாடின்றி வழிபாடு செய்து நேர்த்திகடன் செலுத்தி கொண்டனர்.
மதுரை, விருதுநகர், திண்டுக்கல் மற்றும் ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களை ஏராளமானோர் வருகை தந்து சிறப்பு வழிபாடு செய்தனர். சந்தனக்கூடு விழாவினை முன்னிட்டு தர்ஹா முழுவதிலும் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது.
ரா.கௌரி







